நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சல் காரணமாக, கோவை கோவைப்புதூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அனு கீர்த்தனா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 2 படிப்பை முடித்த அனு கீர்த்தனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்தார். கடந்த ஆண்டு பல் மருத்துவப் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்தபோதும், எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தாண்டும் தீவிரமாகப் படித்து, மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்றார்.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது.
மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டதாலும், முந்தைய தேர்வை விட நல்ல மதிப்பெண்கள் பெற முடியுமா என்ற அச்சத்தாலும், மாணவிக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தனது சித்தப்பாவுக்கு வாட்ஸ்அப் மூலம் உருக்கமான செய்தி ஒன்றை அனுப்பிய அவர், “தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் எழுத பயமாக இருக்கிறது. எனக்காக தந்தை அதிக செலவு செய்துள்ளார். இனி அவரது முகத்தில் எப்படி விழிப்பேன் என்று தெரியவில்லை” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, உடல்நலக்குறைவுக்கு ஆளான மாணவியை உறவினர்கள் மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஜூன் 17-ஆம் தேதி அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும், மேலும் நீட் தேர்வு முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ உதவி எண் 104 அல்லது சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050 ஆகியவற்றை தொடர்புகொண்டு இலவச ஆலோசனைகளைப் பெறலாம்
