கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தில் வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெஞ்சமின் – பிலோமினாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். தற்போது பெஞ்சமின் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் நிலையில், அவரது மனைவி பிலோமினாள் தனது மகனுடன் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பிலோமினாள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலால் வீட்டின் முன்புறத்தில் இருந்த மின்விசிறி, மின்விளக்கு உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் வெடித்து சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு அல்லது காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். மேலும், கள்ளக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மனோகரன் தலைமையிலான போலீசார், வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது யார், அதற்கான காரணம் என்ன, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
