ஒரு 11 மாதப் பிஞ்சுத் தளிர் மூச்சுவிடத் திணறிக்கொண்டிருக்கிறது… பெத்த மனம் பதறித் துடித்துக்கொண்டிருக்கிறது… ஆனால், “கரண்ட் கட் ஆகிடுச்சு, ஜெனரேட்டர் இருந்தாலும் போட மாட்டோம், கரண்ட் வர்ற வரைக்கும் காத்திருங்கள்” என்று ஒரு அரசு மருத்துவமனை செவிலியர்கள் அலட்சியமாகச் சொன்ன சொற்கள், இன்று ஒரு தாயின் மடியை வெறுமையாக்கியிருக்கிறது.
டிஜிட்டல் இந்தியா என்றும், நவீன மருத்துவக் கட்டமைப்பு என்றும் மார்தட்டிக்கொள்ளும் இந்த வேளையில், திருப்பத்தூர் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரம், ஒட்டுமொத்தத் தமிழகத்தின் மனசாட்சியையும் உலுக்கியெடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த சுந்தரம்பள்ளியை சேர்ந்த கலைவேந்தன் – ஷாலினி தம்பதியினர் 11 மாத பெண் குழந்தை ருதிஷா-வுக்கு காய்ச்சல் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள்

இருப்பினும், குழந்தைக்கு காய்ச்சல் குறையாததால், கடந்த ஞாயிற்றுகிழமை, திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் பெற்றார்கள் , அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பின்னர் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற போது அங்கும் சிகிச்சைக்கான போதிய வசதி இல்லை எனக்கூறி பக்கத்து மாவட்டமான கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் திருப்பி அனுப்பி உள்ளனர்.
இதையும் படியுங்கள் 👇
செய்வதறியாமல் திகைத்த குழந்தையின் பெற்றோர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால் தனது இருசக்கர வாகனத்திலேயே குழந்தையை 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர், அப்போது கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது குழந்தை ருதிஷா-வுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ‘என்ன ஆச்சுன்னு பாருங்கள்’ என அங்குள்ளவர்களிடம் குழந்தையின் தந்தை கலைவேந்தன் கூறியுள்ளார், டாக்டர் இல்லாததால் பணியில் இருந்த செவிலியர்கள் ”மின்தடை ஏற்பட்டிருக்கிறது குழந்தைக்கு ஆக்ஸிஜன் வைக்க முடியாது” கரண்ட் வரும் வரை காத்திருக்க வைத்துள்ளனர். இதன் காரணமாக, குழந்தை ருதிக்ஷா அதிக மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் இருந்தும், ஆக்ஸிஜன் வைக்காமல் அலட்சியாக இருந்ததாக செவிலியர்களிடம் குழந்தையின் பெற்றோர் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படியுங்கள் 👉 பிஞ்சு உயிரைக் குடித்த அலட்சியம்..! மூடி மறைக்க ஓடோடி வந்த த.வெ.க எம்.எல்.ஏ..! அரசின் இமேஜ்தான் முக்கியமா..?
இதனையறிந்த, திருப்பத்தூர் டிஎஸ்பி முரளி மற்றும் தவெக-வைச் சேர்ந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி விரைந்து வந்து குழந்தையின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி இறந்த குழந்தையின் உடலை ஒப்படைத்தனர்.

குழந்தையின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தும் தவெக எம்.எல்.ஏ டாக்டர்.திருப்பதி
கெஜல்நாயக்கன்பட்டி அரசு சுகாதார நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டும், டாக்டர் இல்லாததாலும் செவிலியர்களின் அலட்சிய போக்கால், தனது குழந்தை இறந்துவிட்டது. எனவே தலைமை மருத்துவர் மீதும் செவிலியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் .எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை இனி எந்த குழந்தைக்கும் நிகழக்கூடாது என கோரிக்கை வைத்து, குழந்தையின் பெற்றோர் கதறி அழுத நிகழ்வு அங்கு பார்ப்போரை கண் கலங்க வைத்தது.
வழியில் ஏற்பட்ட மூச்சுத் திணறலால், “என் பிள்ளையைக் காப்பாற்றுங்கள்” என்று ஓடிவந்த பெற்றோரிடம், மருத்துவர் இல்லை என்றும் மின்தடையைக் காரணம் காட்டி, ஆக்ஸிஜன் செலுத்த மறுத்தும் , காக்க வைத்த செவிலியர்களின் கல்நெஞ்சம், மருத்துவ துறைக்கே நேர்ந்த பெரும் கறை.
“எங்கள் குழந்தைக்கு ஏற்பட்ட இந்த கதி, இனி எந்த ஒரு குழந்தைக்கும் வரக்கூடாது” என்று அந்தப் பெற்றோர் கதறி அழுத அழுகுரல், வெறும் கண்ணீர் அல்ல… அது இந்த அரைகுறை மருத்துவக் கட்டமைப்புக்கு எதிரான சங்கடக்குரல் ஜெனரேட்டர் இருந்தும் அதை இயக்காத அலட்சியத்தின் பின்னணியில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகள் யார்..? சாட்டையைச் சுழற்றுமா மாற்றத்திற்கான அரசு..? பொருத்திருந்து பார்போம்.
சவுதியில் கணவர்… வீட்டில் இருந்த மனைவிக்கு நள்ளிரவில் காத்திருந்த அதிர்ச்சி!
