பெற்ற தாய் -தந்தை பாசத்திற்கும், நெஞ்சில் குடிகொண்ட காதலுக்கும் இடையே நடக்கும் தர்மசங்கடமான போராட்டங்கள் எப்போதுமே ரத்தக் கண்ணீரை வரவழைப்பவை. அப்படியொரு நெஞ்சையுருக்கும் நெகிழ்ச்சியான, பரபரப்பான சம்பவம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு அரங்கேறியுள்ளது.
3 ஆண்டுகளாகக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஏலகிரி மலையில் ரகசியத் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி, பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் தஞ்சமடைந்தார். அங்கு வந்த பெற்ற தாய், தந்தை மகளின் காலைப் பிடித்து கதறியதோடு, சாலையில் உருண்டு புரண்டு அழுத காட்சி பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைத்தது. இறுதியில் நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி லாரி சேட் பகுதியைச் சேர்ந்த காளி–பிரவீனா தம்பதியரின் மகள் திவ்யதர்ஷினி (19). இவர் கிருஷ்ணகிரியிலுள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
இவரை ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மகன் பெருமாள் (23). (சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வருகிறார்). திவ்யதர்ஷினி கல்லூரி செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது பெருமாளுடன் காதல் பற்றிக் கொண்டுள்ளது. மூன்றாண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர் . இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மாணவி திவ்யதர்ஷினி கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி காதலன் பெருமாள் உடன் ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், பாதுகாப்பு கேட்டு வந்த காதல் தம்பதியினர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரின் பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரும்படி தகவல் தெரிவித்ததை தொடர்ந்து
காவல் நிலையத்திற்கு வந்த திவ்யதர்ஷினி பெற்றோர், காதலனை உதறிவிட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்ல திவ்யதர்ஷினியின் காலை பிடித்து அவன் ஒரு பொம்பள பொறுக்கிமா..! வேண்டாம் வா என கதறி அழுதனர் .
இதனைப் பார்த்த போலீசார் திவ்யதர்ஷினியின் பெற்றோரை காவல் நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்ற முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர்கள் காவல் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென உருண்டு புரண்டு கத்தி கதறினர். தொடர்ந்து திவ்யதர்ஷினியின் தந்தை காளி செய்தியாளர்களிடம் கூறுகையில், ”பெருமாளுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு வேறோரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை நானே பார்த்தேன். இதுப்பற்றி ஊரில் விசாரித்தபோது பெருமாளை நல்லவன் என்று யாரும் சொல்லவில்லை. என் மகளை தயவுசெய்து மீட்டுத் தாருங்கள். என்னுடன் அனுப்பி வையுங்கள்” என கண்ணீர் வடித்தார்.
தொடர்ந்து, திவ்யதர்ஷினி காதலன் பெருமாள் உடன்தான் செல்வேன் என கூறிவிட்டு புறப்பட்டதால், பெண்ணின் பெற்றோரை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூரில் காதல் தம்பதியினரை பிரிக்க முயன்று பெண்ணின் பெற்றோர் பாசப் போராட்டம் நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமா ஒரு 9 ரூபாய் நோட்டு..! விசிக-வை மீண்டும் சேர்க்கவேண்டாம்… திமுக-வில் கடும் எதிர்ப்பு..!
