மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக உணவு திருவிழா நடைபெற்றது. இதில் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் கலந்து கொண்டு, அங்கு அமைக்கப்பட்டிருந்த உணவுக் கடைகளை பார்வையிட்டு, பல்வேறு பாரம்பரிய உணவுகளை ருசித்தார். இந்த உணவு திருவிழாவில் தமிழகத்தின் பாரம்பரிய உணவுகள் உள்ளிட்ட ஏராளமான உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன.
பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொண்டு, பல்வேறு உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ், தமிழ்நாட்டில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் இந்த பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் “ஆண்டி-டிரக் கிளப்ஸ்” (Anti Drug Clubs) செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் கிடைக்கும் தகவல்கள் காவல்துறைக்கு பகிரப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சென்னை மாநகரில் “ஆண்டி நார்காடிக் டாஸ்க் போர்ஸ்” (Anti Narcotic Task Force) சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் குறிப்பிட்டார்.
