Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

தமிழகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம், ஜூன் 28, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.

இந்த முகாமை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலை 8.00 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் சுமார் 52.91 லட்சம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், மலைக்கிராமங்கள் மற்றும் எளிதில் சென்றடைய முடியாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க நடமாடும் மருத்துவக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

பிறந்த குழந்தை முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இரண்டு சொட்டு போலியோ மருந்து கட்டாயம் வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே வழக்கமான தடுப்பூசிகளையோ அல்லது முந்தைய போலியோ சொட்டு மருந்தையோ பெற்றிருந்தாலும், இந்த சிறப்பு முகாமில் தவறாமல் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியூர் பயணத்தில் இருப்பவர்களும் அருகிலுள்ள ஏதேனும் ஒரு முகாமில் தங்களது குழந்தைகளுக்கு இலவசமாக போலியோ சொட்டு மருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. எஸ். சமீரன், பாலவாக்கத்தில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமிற்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Eswari

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago