ஆவடி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி பகுதியில், திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பயணித்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென கீழே விழுந்துள்ளார். அவர் பின்னால் இருந்து யாரேனும் தள்ளினார்களா அல்லது மதுபோதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆவடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், கீழே விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்த நிலையில் இருந்த நபரின் உடலை மீட்டனர். பின்னர் உடலை ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் ரயிலில் எவ்வாறு விழுந்தார் என்பது குறித்து—படியில் பயணித்தபோது அல்லது படியில் அமர்ந்து பயணித்தபோது எதிர்பாராத விதமாக விழுந்தாரா, மதுபோதையில் தவறி விழுந்தாரா, அல்லது யாரேனும் அவரை பின்னால் இருந்து தள்ளினார்களா என்பது தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆவடி பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
