சென்னையில் கடன் தொல்லை மற்றும் பணி நிரந்தரம் கிடைக்காத விரக்தியால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக மலேரியா மற்றும் கொசு ஒழிப்பு பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் சாமுவேல் என்பவர் பணியாற்றி வந்தார்.
இவரது தந்தை பல்லாவரம் கண்டோன்மென்ட் வாரியத்தில் பணியாற்றி வந்த நிலையில் உயிரிழந்தார். இதையடுத்து, வாரிசு அடிப்படையில் அந்தப் பணி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சாமுவேல் நீண்ட காலமாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், கண்டோன்மென்ட் நிர்வாகத்தில் சில அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அந்தப் பணியை வேறு ஒருவருக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சாமுவேல், குறைந்த ஊதியம் மற்றும் அதிகரித்த கடன் சுமை காரணமாக விரக்தியடைந்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கு முன்பு அவர் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர், சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
