மத்திய அரசு, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சி இந்தியா லிமிடெட் (NLC India Limited) நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் முடிவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், என்எல்சி இந்தியாவில் மத்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும் தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஏற்காது என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், என்எல்சி இந்தியாவின் 3 சதவீத பங்குகளை ‘ஆஃபர் ஃபார் சேல்’ (Offer for Sale – OFS) முறையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதில் 2 சதவீத அடிப்படை பங்குகளும், கூடுதலாக 1 சதவீத கிரீன்-ஷூ ஆப்ஷனும் (Green Shoe Option) இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனம் மட்டுமல்ல; நாட்டின் முக்கியமான உத்திசார் தேசிய சொத்தாக விளங்குகிறது என்றும், அதன் பங்குகளை தொடர்ந்து குறைப்பது தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
என்எல்சியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், பங்குகள் விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து, அந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தனது அரசு மத்திய அரசுடன் தேவையின்றி மோதலை விரும்பாது என்றும், ஆனால் தமிழகத்தின் உரிமைகள் மற்றும் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களில் தங்களது தத்துவார்த்த ரீதியிலான எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
