திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பவுல் கடல் உணவு பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில், முக்கியமாக இறால் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆலையில் உள்ளூர் மக்களுடன் கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பகல் மற்றும் இரவு என இரண்டு வேளைகளில் பணியாற்றி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அன்றைய தினம் சுமார் 120 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், ஆலையின் வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் தங்கும் அறைகளில் சுமார் 10 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
காலை 9 மணியளவில், முதல் தளத்தில் செயல்பட்டு வந்த இறால் பதப்படுத்தும் பிரிவில் இருந்து கடுமையான நெடியுடன் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் அந்த நச்சு வாயுவை சுவாசித்ததால், வட மாநில தொழிலாளர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன.
தங்கும் அறையில் இருந்த ஆறு பேருக்கு வாய் மற்றும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் நிலவியது. மேலும், அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் சிலருக்கு நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வாயு கசிவு ஏற்பட்ட பின்னரும் சுமார் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அந்த நெடி காற்றில் பரவியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், “வெளியில் நின்ற எங்களுக்கே இன்னும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் உணரப்படுகிறது. அப்படியிருக்க, ஆலையின் உள்ளே இருந்த தொழிலாளர்கள் எவ்வளவு வேதனை அனுபவித்திருப்பார்கள் என்பதை நினைத்தாலே கவலையாக உள்ளது. உயிரிழந்தவர்களையும், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களையும் நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றனர்.
மேலும், “இந்த நிறுவனத்தால் பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. ஆலையிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாகவே பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனிமேலாவது அரசு தலையிட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
