இந்நிலையில், உலகின் கண் முன்னாலேயே கடந்த 50 ஆண்டுகளில் மிகப்பெரிய நீர்நிலை ஒன்று மறைந்து போனது. கஜகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள இந்த நீர்நிலை ‘ஆரல் கடல்’ என அழைக்கப்படுகிறது. பெயரில் கடல் என்றாலும், உண்மையில் இது உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும்.
நியோஜின் காலத்தின் இறுதியில், சுமார் 2.3 கோடி முதல் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்த ஏரி, கடலைப் போன்ற பிரம்மாண்டமான பரப்பளவைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவே இந்த நன்னீர் ஏரி ‘ஆரல் கடல்’ என அழைக்கப்பட்டது.
ஒரு காலத்தில் சுமார் 68 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் உலகின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக விளங்கிய ஆரல் கடல், மனிதர்களின் தவறான திட்டமிடலால் கடந்த சில தசாப்தங்களிலேயே தனது 90 சதவீத நீரை இழந்து, பெரும்பாலும் பாலைவனமாக மாறியுள்ளது.
1960-களில் அப்போதைய சோவியத் யூனியன் அரசு, தனது கட்டுப்பாட்டில் இருந்த கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் பகுதிகளில் பருத்தி மற்றும் பிற பயிர்களை அதிக அளவில் விளைவிக்க திட்டமிட்டது.
இதற்காக, ஆரல் கடலுக்கு நீர் வழங்கிய அமு தர்யா மற்றும் சிர் தர்யா ஆகிய இரண்டு முக்கிய ஆறுகளின் நீர், பிரம்மாண்டமான கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்காக திசைதிருப்பப்பட்டது.
இதன் மூலம் அந்தப் பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரித்தாலும், ஆரல் கடலுக்கு வந்த நீரின் அளவு கடுமையாகக் குறைந்தது. கடும் வெப்பம் மற்றும் ஆவியாதல் காரணமாக, ஏரி படிப்படியாக வற்றத் தொடங்கியது. இதனால், ஒரு காலத்தில் செழித்து விளங்கிய மீன்பிடித் தொழில் முற்றிலும் அழிந்தது.
துறைமுக நகரங்களாக இருந்த பகுதிகள் இன்று பாலைவனத்தின் நடுவே கப்பல்களின் இடுகாடுகளாக காட்சியளிக்கின்றன. வற்றிப்போன கடலின் அடிப்பகுதியில் தேங்கியிருந்த நச்சு இரசாயனங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கலந்த உப்பு மண், பலத்த காற்றின் மூலம் நச்சுத் தூசிப் புயல்களாக மாறி நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பரவி வருகின்றன.
இதனால் மனிதர்களின் உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆரல் கடலின் மறைவு தொடர்பாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், ஆரல் கடலின் எஞ்சிய பகுதிகளை காப்பாற்றும் முயற்சியாக, 2005-ஆம் ஆண்டு உலக வங்கியின் உதவியுடன் கஜகஸ்தான் அரசு வடக்கு ஆரல் கடல் பகுதியில் கோக்-ஆரல் அணையை அமைத்தது. இதன் மூலம் வடக்கு ஆரல் கடலில் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்ததுடன், மீன் வளமும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் பகுதியளவில் மீண்டுள்ளன.
இருப்பினும், தெற்கு ஆரல் கடல் பகுதி பெருமளவில் வறண்டு, மீட்க முடியாத நிலையை எட்டியுள்ளது.
இயற்கையை அதன் இயல்பான போக்கில் விடாமல், பேராசைக்காக மனிதன் மேற்கொள்ளும் சுயநலச் செயல்பாடுகள் எத்தகைய பேரழிவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு ஆரல் கடலின் அழிவே மிகப்பெரிய எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை வளங்களின் அளவுக்கு மீறிய பயன்பாடு குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை இந்த ஆரல் கடல் பேரழிவு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.
மனிதர்களின் தவறான செயல்பாடுகள் எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கை பாடமாக ஆரல் கடலின் வரலாறு உலகம் முழுவதும் கருதப்படுகிறது.
