ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புதிய ஒப்பந்தம், ஈரானுக்குள் எதிர்ப்பு- ஆதரவு அரசியல் சூழலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி பெயரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தி, இந்த விவாதத்தை மேலும் தூண்டியுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, மொஜ்தபா கமெனி, பொதுமக்களிடையே ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் பரப்பும் அறிக்கைகள், செயல்கள் எதிரிக்கு உதவுவதற்குச் சமம் என்று கூறினார்.
இந்த அறிக்கை, ஒப்பந்தத்தை எதிர்க்கும் தீவிரவாதத் தலைவர்களுக்கும் அமைப்புகளுக்கும் ஒரு எச்சரிக்கையாகக் கருதப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முக்கிய தலைவரான முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர், நாட்டின் உச்ச தலைமையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஆதரவளிப்பதாகக் கூறினர்.
கடந்த பல வாரங்களாக, சில தீவிரவாத ஈரானிய ஊடகங்கள், மதத் தலைவர்கள், அரசியல் குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவது ஈரானின் நலனுக்கு உகந்ததல்ல என்றும், அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இவர்களில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் நீண்டகால விமர்சகரான “கய்ஹான்” பத்திரிகையின் ஆசிரியர் ஹுசைன் ஷரியத் மதர, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோசாரி ஆகியோரும் அடங்குவர். இது வெறும் பொதுவான விமர்சனம் மட்டுமல்ல, பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கவும், நாட்டிற்குள் பிளவுகளை அதிகரிக்கவும் செய்யப்படும் ஒரு திட்டமிட்ட முயற்சி என்று ஈரானிய இணையதளமான கபார் ஆன்லைன் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய எதிர்ப்பாளராக அரசு நடத்தும் தொலைக்காட்சி சேனலான IRIB-ஐ அந்த அறிக்கை அடையாளம் காட்டியுள்ளது.
பல மதகுருக்கள் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். மதகுரு குலாம்ரெஸா காசிமியன், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் ஹராம் என்று கூறியுள்ளார். ஷேக் இஸ்மாயில் ரமஸானி, அமெரிக்காவுடன் நல்லுறவு ஒருபோதும் சாத்தியமில்லை என்று கூறியுள்ளார்.
தீவிரவாத பைதாரி கட்சியும் இந்த ஒப்பந்தத்தை விமர்சித்து வருகிறது. அக்கட்சியுடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடகங்களும் பேச்சுவார்த்தைக் குழுவிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இருப்பினும், இந்த எதிர்ப்பு பைதாரி கட்சியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. வேறு பல மத மற்றும் அரசியல் குழுக்களும் அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கின்றன.
உச்ச தலைமையின் வழிகாட்டுதல்களை எதிர்ப்பவர்கள் கடுமையான மக்கள் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்று காலிபாஃப் எச்சரித்துள்ளார். இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு எதிர்ப்புக் குரல்கள் ஓரளவு தணிந்திருந்தாலும், அமெரிக்காவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்த விஷயத்தில் ஈரானுக்குள் ஆழமான பிளவுகள் நீடிக்கின்றன என்பது தெளிவாகிறது.
