தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஒரு ஹோட்டலில், பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை (எம்.ஆர்.பி.) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், எம்.ஆர்.பி. விலையை விட ஏன் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என வாடிக்கையாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ஹோட்டல் ஊழியர்கள், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு இலவச சேவைகள் வழங்கப்படுவதால் அதற்கான செலவையும் சேர்த்தே பொருட்கள் விற்கப்படுகின்றன என விளக்கம் அளிக்கின்றனர்.
இதற்கு பதிலளித்த வாடிக்கையாளர், எந்த இடத்தில் விற்பனை செய்தாலும் எம்.ஆர்.பி. விலையில்தான் பொருட்கள் விற்கப்பட வேண்டும் என்றும், கூடுதல் தொகை வசூலிப்பது முறையல்ல என்றும் வலியுறுத்துகிறார்.
மேலும், இது குறித்து நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் புகார் அளிக்கப்போவதாகவும், ஒரு பொருளுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும், தினசரி அடிப்படையில் அது பெரிய அளவிலான வருமானமாக மாறும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நெடுஞ்சாலை ஓர ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் எம்.ஆர்.பி. விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
