தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ந்து, ஆரோக்கியமான திசுக்களைப் பாதிக்கும் நோய்களின் தொகுப்பே புற்றுநோய் எனப்படுகிறது. துரித உணவு, பாக்கெட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது, உடற்பயிற்சியின்மை, உடல் பருமன், புகைப்பிடித்தல் மற்றும் மதுப் பழக்கம் உள்ளிட்டவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
தமிழகத்தில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், வாய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள் அதிகளவில் கண்டறியப்படுகின்றன. குறிப்பாக பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நகர்ப்புற ஆண்களிடையே குடல் மற்றும் இரைப்பைப் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் கூறுகையில், உணவுமுறை, உடல் செயல்பாடு, வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் புற்றுநோய் பாதிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். குழந்தைகளிடையேயும் புற்றுநோய் பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு தேவை என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது சிகிச்சையின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. உடலில் நீண்ட நாட்களாக நீடிக்கும் கட்டி, காரணமின்றி ஏற்படும் உடல் எடை குறைவு, தொடர்ந்து நீடிக்கும் வலி உள்ளிட்ட மாற்றங்களை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பெண்கள், குறிப்பாக 40 வயதைக் கடந்தவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வயது, பாலினம் மற்றும் தனிப்பட்ட ஆபத்துக் காரணிகளுக்கு ஏற்ப உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம்.
பரம்பரை மூலம் புற்றுநோய் ஏற்படுமா என்ற சந்தேகமும் பொதுமக்களிடம் உள்ளது. சில வகை புற்றுநோய்களுக்கு மரபணு சார்ந்த காரணிகள் இருக்கலாம் என்றாலும், குடும்பத்தில் ஒருவருக்கு புற்றுநோய் இருந்தால் அடுத்த தலைமுறையினருக்கும் புற்றுநோய் ஏற்படுவது கட்டாயம் அல்ல என மருத்துவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். அதேபோல், கர்ப்பிணிக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தால், அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கும் புற்றுநோய் ஏற்படும் என்பது கட்டாயமல்ல.
தமிழகத்தில் புற்றுநோய் தடுப்பு, ஆரம்பக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தை நவீன புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையமாக மேம்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்திய அளவிலும் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தரவுகள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் அனைத்து வகை புற்றுநோய்களையும் சேர்த்து சுமார் 15.7 லட்சம் புதிய பாதிப்புகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
எனவே, ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்ற அடிப்படையில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, புகையிலை மற்றும் மதுப் பழக்கத்தைத் தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும். உடலில் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் தென்பட்டால் தாமதிக்காமல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
புற்றுநோய் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டால் பல வகையான புற்றுநோய்களை வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும். எனவே, விழிப்புணர்வும், ஆரம்பக் கட்டப் பரிசோதனையும் புற்றுநோயை எதிர்கொள்வதில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
