”நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 400 இந்தியர்கள் சீனப் பகுதியில் சிக்கியுள்ளனர். அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். இந்தியத் தூதரகம் அவர்களுடன் தொடர்பில் உள்ளது. சீனப் பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள சுமார் 100 இந்தியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை” என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.
சீனப் பகுதியில் சிக்கிய 400 இந்தியர்கள்
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறுகையில், “சீனப் பகுதியில் 400 இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளனர். இந்தியத் தூதரகம் அவர்களில் பலருடன் தொடர்பில் உள்ளது. சீனாவில் உள்ள நமது தூதரகம் இயக்கும் உதவி எண்கள் மூலம் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பலரும் எங்களைத் தொடர்பு கொண்டனர். நமது தூதரகம் சீனாவில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதுடன், அங்குள்ள இந்த மக்களை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தும் பணியாற்றி வருகிறது.
நேபாளத்திற்கு இந்தியா அனுப்பிய அத்தியாவசிய உதவிகள்
”துயரம் நிகழ்ந்த நாளன்றே மனிதாபிமான நிவாரணப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும், முதல் விமானம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாலை புறப்பட்டதாகவும் ரந்தீர் ஜெயஸ்வால் விளக்கினார். அது தற்காலிக முகாம்கள், போர்வைகள், சுகாதாரப் பெட்டிகள், சூரிய விளக்குகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட 10 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றது. அதைத் தொடர்ந்து, இரண்டாவது விமானம் நேற்று, ஆகஸ்ட் 27 ஆம் தேதி, காலை சுமார் 10:30 மணியளவில் புறப்பட்டது. இந்த விமானம் கூடாரங்கள், போர்வைகள், சுகாதாரப் பெட்டிகள், சூரிய விளக்குகள், தண்ணீர் இறைப்பிகள், சமையலறை உபகரணங்கள், ஜெனரேட்டர் தொகுப்புகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 37.5 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்றது.
நாங்கள் மூன்றாவது விமானம் ஒன்றை அனுப்புவது குறித்து பரிசீலித்து வருகிறோம், அது இன்று மாலை புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானத்தில் கையடக்க மின்னாக்கிகள், கண்ணியப் பெட்டிகள், உணவு, நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், மருந்துகள் மற்றும் நேபாளத் தரப்பால் கோரப்பட்ட பிற பொருட்களும் அடங்கும்… இந்த விமானத்தின் மொத்த எடை சுமார் 12 முதல் 13 டன்கள் வரை இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
