https://republictn.com/

தர்மபுரி மாவட்டம் அருகே சொத்துத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவரும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டி அள்ளி அருகே உள்ள தகடனூர் நகரைச் சேர்ந்த நஞ்சம்மாள் (50) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (34) ஆகியோர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இருவரும் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் உயிரிழந்த நிலையில் இருப்பதாக அஜீமான் கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தர்மபுரி துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சிவராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். விசாரணையில், சொத்துத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக, மாதேஷ் தனது அக்கா நஞ்சம்மாளுக்கு நிலம் எழுதி வைத்தது தொடர்பாக குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாதேஷின் மனைவிக்கும் நஞ்சம்மாளுக்கும் இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரத்தில், கூலிப்படையினரை வைத்து அக்கா மற்றும் தம்பியை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அஜீமான் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்துத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்த இரட்டை கொலை சம்பவம், தர்மபுரி மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே லட்சுமி (50) என்ற பெண் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago