மனித நாகரிகத்தின் தொடக்க காலமான கீழைப் பழங்கற்காலம் சுமார் 15 முதல் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 50,000 ஆண்டுகள் வரை நீடித்தது. இக்கால மனிதர்கள் வேட்டையாட மற்றும் விலங்குகளின் தோலை உரிக்க பெரிய கற்கோடரிகள், வெட்டும் கருவிகள் மற்றும் சுரண்டும் கருவிகளைப் பயன்படுத்தினர்.
இக்கால கருவிகள் குவாட்சைட் (Quartzite) மற்றும் கூழாங்கற்களைக் கொண்டு கைக்கோடரிகள், வெட்டுக்கத்திகள் போன்ற பெரிய இருமுகக் கருவிகளைத் தயாரித்தனர். த அதிரம்பாக்கம் பகுதியில் இத்தகைய பழமையான கருவிகள் கண்டறியப்பட்டன. அதற்கடுத்து , திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியரும், வரலாற்றியல் ஆய்வாளருமான முனைவர் பிரபு தலைமையிலான ஆய்வு குழுவினரால் கந்திலி பகுதியில் கண்டெடுக்கப் பட்டிருக்கிறது

இது குறித்துப் பேராசிரியர் பிரபு republic – தமிழுக்காக அளித்த பேட்டியில், ‘
திருப்பத்தூர் மாவட்டம் “கந்திலி’ மலை முருகன் கோயில் அடிவாரத்தில் ஆய்வு மாணவர் குழந்தைவேல், பெரியசாமி, சூர்யபிரகாஷ் உள்ளிட்ட எங்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை ஒன்றைக் கண்டறிந்தோம். அது இயற்கையாக அமைந்த இக்குகையானது 30 முதல் 50 பேர் வரை வாழ்திருக்கலாம்.
குகை முகப்பின் எதிரே உள்ள திறந்த வெளியில் சிறுசிறு கற்கள் செம்மண் கொண்டு சுவர் போல எழுப்பி மழை நீர் உட்புகாத வண்ணம் குகையின் வடிவமைப்பு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் உள்ள கற்சுவர்களில் கற்கால ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் சிதைந்த நிலையில் இருப்பதை கண்டோம்.

குகை அமைவிடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் சமீபத்தில் தோண்டப்பட்ட மழைநீர் சேகரிப்புக் குட்டையில் கீழைப் பழங்கற்காலக் கற்கருவி ஒன்றும் புதிய கற்கால கற்கருவிகளும், அரவைக் கற்களும், சிதைந்த நிலையில் கருப்பு சிவப்பு வண்ணத்தில் மண்பாண்ட ஓடுகளும், விலங்குகளின் எலும்பு எச்சங்களும் அங்கே சிதறிக் கிடந்தது. சுடுமண் வட்டச் சில்லுகள், சுடுமண் கெண்டிகளும் ஆய்வில் கண்டெடுத்தோம்.
இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்கருவியானது சாதாரண கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை முற்காலத்தில் நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதன் உணவுப் பொருட்களைக் கிழிக்கவும், வெட்டவும், விலங்குகளை வேட்டையாடவும், அவற்றிடமிருந்து தற்காத்துக் கொள்ளவும் பயன்படுத்தி வந்துள்ளான்.

சமீபத்தில் செங்கற்பட்டு மாவட்டம், பல்லாவரம் அருகே கற்களிலான கோடாரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் கண்டெடுத்தனர். இவை சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதி மனிதர்கள், விலங்குகளை வேட்டையாடவும், மரங்களை வெட்டவும் இக்கற்கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்
திருவள்ளூர் மாவட்டம், அதிரம்பாக்கத்தில் 1863 -ஆம் ஆண்டு புகழ்பெற்ற நிலவியலாளர் ராபர்ட் புரூஸ் ஃபூட் அவர்களால் கண்டறியப்பட்ட கீழைப்பழங்கற்கால ஆயுதங்கள் அனைத்தும் குவாட்சைட் என்ற பாறைகளால் ஆனவை. பழங்கற்கால மனிதர்கள் பாறைகளில் நெருப்பை ஏற்றிச் சூடாக்கிய பின்னர், அதன் மேல் நீரை ஊற்றிப் பாறைகளைப் பிளந்து இவ்வாயுதங்களைச் செய்திருக்கலாம்.
அதற்கடுத்து நமது திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே கண்டறியப்பட்ட பழங்கற்கால ஆயுதமும் குவாட்சைட் வகைக் கல்லால் ஆனதாகும். இவ்வகைக் கீழைப் பழங்கற்காலக் கருவி, சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கற்கருவி மாவட்டத்தில் கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த வரலாற்று தடயங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இதன்மூலம் இப்பகுதியில் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மனித நாகரிகங்கள் இருந்துள்ளதாக அறிய முடிகிறது. இங்கு மேற்பரப்பில் கண்டறியப்பட்ட இப்பொருட்கள் 50- க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் சிதறிக் கிடக்கின்றன.

தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு
ஐந்து மாதங்களுக்கு முன்பு எங்களது ஆய்வறிக்கை பட்டியலை தமிழகத் தொல்லியல் துறைக்கு அனுப்பி வைத்தோம். அரசு வெளியிடப்பட்ட அகழ்வாராய்ச்சி பட்டியலில் குண்டுரெட்டியூர் மற்றும் கந்திலி ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், இடம்பெறவில்லை.
முறையான அகழ்வாராய்ச்சி மேற்பரப்பில் மட்டும் கிடைக்கும். கருவிகளை வைத்து முடிவுக்கு வராமல், ஆழமான மண் அடுக்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உலகப் புகழ்பெற்ற இதுபோன்ற தொல்லியல் தளங்களைப் பாதுகாக்கவும், தொடர்ந்து பல இடங்களில் ஆய்வுகளை நடத்தவும் முறையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த ஆய்வுகள் மூலம் தமிழர்களின் வரலாற்றுத் தொடர்ச்சி பல இலட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை அறிவியல் பூர்வமாக உலகிற்கு நிரூபிக்க முடியும்” என்றார்.
