https://republictn.com/

“ஆன்லைன் சூதாட்டம் ஒரு சமூகப் பேரழிவு” என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வரும் நிலையிலும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் தமிழ்நாட்டில் தொடர்கதையாகி வருகின்றன. லட்சக்கணக்கான குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த ஆன்லைன் கேமிங் அரக்கன், தற்போது படித்த பட்டதாரி இளைஞர்களைக் கூட கொள்ளையர்களாக மாற்றும் அவலநிலை அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோதிமங்கலம் பகுதியில் போலீசாரின் சாதாரண வாகனத் தணிக்கையின் போது சிக்கிய ஒரு இளைஞர், ஆன்லைன் சூதாட்ட மோகத்தால் எப்படி ஒரு தொடர் கொள்ளையனாக மாறினார் என்ற அதிர்ச்சிப் பின்னணி அம்பலமாகியுள்ளது. “இழந்த பணத்தை மீட்க மீண்டும் மீண்டும் திருடினேன்” என அந்த இளைஞர் கொடுத்த வாக்குமூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோதிமங்கலம் பகுதியில் ஜூலை 11-ம்தேதி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சந்தோஷ் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் 2,75000 ரூபாய் இருந்ததை கண்டுபித்தனர்.

பின்னர் காவல்நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக சந்தோஷ் பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தான் பட்டதாரி என்றும் பல மாதங்களாகவே ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி வேலைக்கு கூட செல்லாமல் மற்றவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைனில் அவதார் கேம் விளையாடுவதையே வாடிக்கையாகக் வைத்திருந்ததாகவும், சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் ரூ.20 ஆயிரத்தை இழந்ததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் கடன் சுமையால், விட்டதை எடுக்க நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், போன்ற இடங்களில் நகை, பணம் கொள்ளை அடித்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தீவிர சோதனையில், 9.2 கிராம் தங்க நகை 2,75 000 ரொக்கபணம் 190 கிராம் வெள்ளி பொருட்கள் ஒரு செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்ததனர்.

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் அதிலிருந்து மீண்டு வர முடியாமல் திருட்டில் ஈடுபட்டு அந்த பணத்தை முதலீடு செய்து ஆன்லைன் சூதாட்டாம் விளையாடி வந்தது அந்த இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் குரிசிலப்பட்டு சண்முகம் கூறுகையில்,”ஆன்லைன் சூதாட்டம் இரு முறை தடை செய்யப்பட்டது. ஆனாலும், அந்தத் தடையை நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி முன்பு இருந்த ஆளுநர் ரவி தடையை நீக்கினார். இதன்காரணமாகவே ஆன்லைன் சூதாட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து தற்கொலை செய்வதும் சிலர் திருட்டில் ஈடுபட்டு அந்த பணத்தில் சூதாட்டம் ஆடி வருவது தொடர்கதையாகி வருகிறது.

முந்தைய திமுக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்குப் பொருந்தாது என்று கடந்த 2024 நவம்பர் 10-ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு இதுவரை 16 பேர்களுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்” என்றார்.

திருப்பத்தூரில் சிக்கிய இந்த பட்டதாரி இளைஞர் ஒரு சோற்றுப் பதம் தான்! தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் இப்படி எத்தனை ஆயிரம் இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் இந்த ஆன்லைன் சூதாட்ட அரக்கனிடம் அடகு வைத்துவிட்டு, குற்றவாளிகளாக மாறக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற பயம் இப்போது ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கத் தொடங்கியுள்ளது.

எனக்கு இந்தப் பதவியே வேண்டாம்.. விஜய் எடுத்த விபரீத முடிவு… இதுக்கா சார் உங்களுக்கு ஓட்டுப்போட்டாங்க..! கெஞ்சும் அதிகாரிகள்..!

சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நீதிமன்ற முட்டுக்கட்டைகளாலும், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தாலும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தடையின்றி கல்லா கட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதன் விளைவைச் சந்திப்பது என்னவோ ரத்தமும் சதையுமான நம் தமிழ்நாட்டுப் பிள்ளைகளும், நடுத்தெருவுக்கு வரும் அவர்களது குடும்பங்களும்தான். கடந்த சில மாதங்களில் மட்டுமே 16-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருப்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல; இந்தச் சமூகத்தின் மனச்சாட்சியின் மீது விழுந்த சம்மட்டி அடி.

”ஜல்லிக்கட்டு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 7 மாதங்களுக்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்!

படித்த படிப்பை அடகு வைத்துவிட்டு, சூதாடிய கடனை அடைக்க ஒரு பட்டதாரி இளைஞன் கொள்ளையனாக மாறிய இந்தச் சம்பவம், ஆட்சியாளர்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் இறுதி எச்சரிக்கை. இனிமேலும் ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக நம் வீட்டுப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பலி கொடுக்கப் போகிறோமா? அல்லது இரும்புக்கரம் கொண்டு இந்த டிஜிட்டல் மரணக் குழியை மூடப்போகிறோமா? விடை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழ்நாடு அரசு.

திமுகவுக்கு தில் இருக்கா..? மு.க.ஸ்டாலினுக்கு துரை வைகோ சவால்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

Manikandan Kaliyappan

By Manikandan Kaliyappan

முன்னணி ஊடகங்களில் 7 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்கிறேன். அரசியல் , க்ரைம், ஸ்டோரி என செய்திகளை சுவாரசியமாக கொடுப்பதில் ஆர்வம் அதிகம். சமூக வலைதளங்களின் டிரெண்டை புரிந்துகொண்டு செய்திகளை வழங்குவதில் தேர்ந்த அனுபவம் உண்டு. தற்போது "REPUBLIC தமிழ்நாடு" ஊடகத்தில் இணை ஆசிரியராக பணியாற்றுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 hours ago at 19 hours ago