“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வீட்டில் மினரல் வாட்டர் குடிக்கலாம், ஆனால் வாக்களித்த நாங்களோ காற்று வாட்டர் தான் குடிக்கிறோம்” என கம்பம் நகராட்சி பொதுமக்கள் வெளியிட்டுள்ள ஆதங்க வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
தேனி மாவட்டம், கம்பம் தவெக எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ராவின் சொந்த ஊரான கம்பம் நகராட்சியில், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 11-ஆவது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. குடிநீருக்காக பொதுமக்கள் அலைந்து திரிந்த நிலையில், கடுமையான புகார்களுக்குப் பிறகு 10 நாட்கள் கழித்து ஒருவழியாக இன்று அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் திறக்கப்பட்டன.

திறந்தால் தண்ணீர் வந்ததா?
தண்ணீர் வரும் என குடங்களுடன் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குழாயைத் திறந்தவுடன் தண்ணீருக்குப் பதிலாக வெறும் காற்று மட்டுமே சீறிக்கொண்டு வந்துள்ளது. அதுவும் சில நிமிடங்களிலேயே முற்றிலுமாக நின்று போனது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், குடிநீர் குழாயில் தண்ணீர் வராமல் வெறும் காற்று வரும் காட்சியைத் தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
மேலும், “சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் தங்களது வீடுகளில் சொகுசாக மினரல் வாட்டர் குடிக்கிறார்கள். ஆனால், சாமானிய மக்களாகிய எங்களுக்குக் குடிக்கக் கூடத் தண்ணீர் தராமல் வெறும் காற்றை மட்டுமே விநியோகம் செய்கிறார்கள்” என தங்களது குமுறல்களைக் கொட்டி வருகின்றனர்.
தற்போது இந்த ‘காற்று வாட்டர்’ வீடியோ கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வாட்ஸ்அப், பேஸ்புக் பக்கங்களில் காட்டுத்தீயாகப் பரவி, நகராட்சி நிர்வாகத்திற்கும் சட்டமன்ற உறுப்பினருக்கும் பெரும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படைத் தேவையான குடிநீரை உடனே வழங்காவிட்டால் மறியல் போராட்டம் வெடிக்கும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.
-த.முத்துவெளியப்பன், தேனி மாவட்ட செய்தியாளர்
