கடந்த ஜூலை 13-ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தனது சொந்தத் தொகுதியான பெரம்பூருக்குச் சென்று மக்களுக்குப் புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அந்த மேடையில் முதலமைச்சருக்கு மிக அருகில் நின்று, சிரித்துப் பேசி, புகைப்படங்களுக்குக் கம்பீரமாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இயக்குநர் உமாநாத் ஐஏஎஸ்.
ஆனால், விழா முடிந்து முதலமைச்சர் விஜய் தனது காரில் ஏறி தலைமைச் செயலகம் செல்வதற்குள், ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றப் பட்டியல் ஒன்று வெளியாகி கோட்டை வட்டாரத்தையே அதிர வைத்தது. அதில், சிஎம்முடன் மேடையில் வலம் வந்த உமாநாத் ஐஏஎஸ் தொழில்துறை ஆணையராக மாற்றப்பட்டிருந்தார்.
“மேடையில் அத்தனை நெருக்கம்… அடுத்த சில நிமிடங்களில் தூக்கி அடிப்பு…” – இதன் பின்னணியில் ஓடிய பிரம்மாண்ட டெண்டர் பாலிடிக்ஸ் தான் இப்போது கோட்டையின் ஹாட் டாபிக்.
நாமக்கல் ‘கிறிஸ்டி புட்ஸ்’ ஸ்கெட்ச்
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக ரேஷன் கடைகளுக்குத் தேவையான துவரம்பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தற்போது சூடுபிடித்துள்ளன. பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த டெண்டரை, எப்படியாவது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ‘கிறிஸ்டி புட்ஸ்’ நிறுவனத்திற்குத் தூக்கிக் கொடுக்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனும், மருத்துவத்துறை அமைச்சர் அருணும் பின்னணியில் பயங்கரமாகக் காய் நகர்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

முறுக்கிக் கொண்ட ஐஏஎஸ்
அமைச்சர்கள் இருவரும் தங்களுக்கு சாதகமான ‘அன்-அஃபிஷியல்’ கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்க, நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநராக இருந்த உமாநாத் ஐஏஎஸ் இதற்கெல்லாம் சற்றும் மசியவில்லை எனத் தெரிகிறது. “உங்களுக்கு முன்னாடியே நாங்க இந்தத் துறையில பழம் தின்னு கொட்டை போட்டவங்க…” என்கிற ரீதியில், அமைச்சர்களின் சிபாரிசுகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், ‘அருணாச்சலம் இன்ஃபோடெக் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திற்கு அந்த மெகா டெண்டரை வழங்க உமாநாத் முடிவெடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
சிஎம் காதுக்குச் சென்ற மேட்டர்
தங்கள் பேச்சைக் கேட்காமல் துறை இயக்குநர் தன்னிச்சையாகச் செயல்படுவதைக் கண்டு கடுப்பான அந்த இரண்டு அமைச்சர்களும், “எங்கள் பவர் தெரியாமல் விளையாடுகிறாரா?” எனப் பாய்ந்துள்ளனர். உமாநாத்தின் இந்த ‘பருப்பு வேகாத’ பிளானை, விஷ்ணு ரெட்டி மற்றும் கோட்டையிலுள்ள ஒரு பவர்ஃபுல் அதிகாரி மூலமாக முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்குக் கொண்டு சென்றனர்.
“அரசு நிர்வாகத்தில் அமைச்சர்களின் பேச்சை மதிக்காமல், தனது இஷ்டத்திற்கு ஆடுகிறார்” என உமாநாத் குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வாசிக்கப்பட, அதிரடி காட்டிய முதலமைச்சர் விஜய், உடனடியாக அவரைத் தூக்கி அடிக்க உத்தரவிட்டுள்ளார்.
ஸ்டாலின் தனிச் செயலாளர்..
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளராக வலம் வந்தவர் இந்த உமாநாத் ஐஏஎஸ். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் இவருக்குப் பவர்ஃபுல்லான போஸ்டிங் கொடுக்கப்பட்டிருந்தாலும், முந்தைய ஆட்சியில் மிக நெருக்கமாக இருந்த பிற அதிகாரிகளுக்குப் பின்னணியில் இருந்து கட்டம் கட்டிய பெருமை இவருக்கு உண்டு என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.
கோடிகள் புரளும் பருப்பு, எண்ணெய் டெண்டர் விவகாரத்தில் அமைச்சர்களுடன் மோதி, மேடையில் இருந்தபடியே ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் விக்கெட் ஆகியிருக்கும் விவகாரம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
