ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கலவை பகுதியில் செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ (ICICI) வங்கியின் ஏடிஎம் மையத்தை மர்ம நபர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து, அதிலிருந்த சுமார் ₹7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலவை பகுதியில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வேளாண் கல்லூரி வளாகத்தில், மாணவர்களின் பணப் பரிவர்த்தனைக்காக ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி இரவு, ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வங்கி மேலாளர் அந்த ஏடிஎம் மையத்தை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையைச் சாதகமாக பயன்படுத்திய மர்ம நபர்கள், நள்ளிரவில் ஏடிஎம் மையத்திற்குள் புகுந்துள்ளனர். ஏடிஎம் மையத்தின் வெளிப்புற சிசிடிவி கேமராக்கள் ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த கொள்ளையர்கள், ஏடிஎம் மையத்தின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த முக்கிய சிசிடிவி கேமராவின் லென்ஸ் மீது கருப்பு மையைப் பூசி, தங்களது அடையாளம் பதிவாகாத வகையில் மறைத்துள்ளனர்.
அதன்பின், தாங்கள் கொண்டு வந்திருந்த வெல்டிங் இயந்திரத்தை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை துண்டு துண்டாக வெட்டி உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ₹7 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நேற்று மாலை, ஏடிஎம் இயந்திரத்தின் பழுதை சரிசெய்வதற்காக வங்கி மேலாளர் மீண்டும் அங்கு வந்தபோது, இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) மற்றும் வேலூர் சரக காவல் துணைத் தலைவர் (டிஐஜி) ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் வடமாநில கொள்ளையர் கும்பலுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளையர்களை விரைவில் கைது செய்யும் நோக்கில், மூன்று முதல் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு முதல் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி, பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
