https://republictn.com/

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பேரிடர் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏராளமானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெளிநாட்டு நேரப்படி நேற்று மாலை சுமார் 6.40 மணியளவில் முதற்கட்டமாக நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதிகளில் கட்டிடங்களின் கூரைகள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பல அடுக்குமாடி கட்டிடங்கள் சீட்டு கட்டு போல சரிந்து விழும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. பின்னர் குறுகிய நேர இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் வெனிசுலாவை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் தேவாலயங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் பல இடங்கள் முழுமையாக தரைமட்டமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பேரழிவின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

தலைநகர் கராகஸின் முக்கிய சர்வதேச விமான நிலையமான சைமன் பொலிவர் சர்வதேச விமான நிலையம் (Simón Bolívar International Airport) கடுமையான சேதமடைந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட சிவப்பு எச்சரிக்கையின்படி, இந்த கடுமையான நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் மற்றும் மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஏதுவாக, நாட்டின் அனைத்து பொது மற்றும் தனியார் மருத்துவ நெட்வொர்க்குகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரக் கம்பங்கள் சரிந்து விழுந்ததாலும், தொலைத்தொடர்பு கோபுரங்கள் பாதிக்கப்பட்டதாலும் மின்சாரம் மற்றும் இணையச் சேவைகள் முடங்கியுள்ளன. இது மீட்புப் பணிகளில் பெரும் சவாலாக மாறியுள்ளது.

தற்போது மீட்புப் படையினர் இடிபாடுகளுக்கிடையே உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிய அதிநவீன கருவிகள் மூலம் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago