மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் அனைத்தும், ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த ஒற்றைத் தாக்குதலால் தவிடுபொடியாகியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் அப்பட்டமாக மீறியுள்ளதாகக் கூறி, அமெரிக்கா அதன் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான (ட்ரோன்) தளங்கள் மீது நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல், அப்பகுதியில் பெரும் போர்ப் பதற்றத்தை மீண்டும் எரியூட்டியுள்ளது.
அமெரிக்காவின் ஆக்ரோஷம்
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில், தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஈரான் தொடர்ந்து முயன்று வருகிறது. இதன் உச்சகட்டமாக, ஓமன் கடற்கரைக்கு அப்பால் சென்ற சரக்குக் கப்பல் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. “ஈரான் சற்று வித்தியாசமான நாடு; அவர்கள் நடத்திய தாக்குதல்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று எச்சரித்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க மத்திய கட்டளை மையம் ஈரானின் ராணுவக் கட்டமைப்புகள் மீது துல்லியமான பதிலடித் தாக்குதலை நடத்தியுள்ளது.
உலகப் பொருளாதாரத்திற்கு ஆபத்து
மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அமெரிக்காவும் ஈரானும் 60 நாட்கள் காலக்கெடுவுடன் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கைக்காகப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்தத் துரோகத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் சிக்கியிருந்த சுமார் 500 கப்பல்களை மீட்கவும், மாற்றுப் பாதையை உருவாக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் முகமை (IMO) எடுத்த தீவிர முயற்சி, இந்த வன்முறையால் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு உத்தரவாதம் கிடைக்கும் வரை மீட்புப் பணிகள் தொடங்காது என IMO பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ் அறிவித்துள்ளார். ஈரானின் அச்சுறுத்தலால், ஐ.நா. ஆதரவுப் பாதையில் செல்ல முயன்ற பல எண்ணெய்க் கப்பல்கள் கட்டாயமாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
போருக்கு முன்பு தினசரி 130 ஆக இருந்த கப்பல்களின் போக்குவரத்து, தற்போது பாதியாகக் குறைந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தையும் வர்த்தக நம்பிக்கையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஈரானின் அணுசக்தி விவகாரம் மற்றும் கடல்வழி ஆதிக்கம் குறித்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் நடக்கும் இந்த ஏவுகணை மோதல்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் எந்த நேரத்திலும் ஒரு முழுமையான போராக வெடிக்கக்கூடும் என்ற அபாய எச்சரிக்கையை உலகிற்கு விடுத்துள்ளது.
