ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவரும், திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் விவேகானந்தா மற்றும் கொங்கு கல்வி நிறுவனங்களின் உரிமையாளர், தாளாளர் மற்றும் பங்குதாரருமான சக்திவேல் (56), ஈரோட்டில் சரக்கு ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக்திவேல், திருப்பூர் மாவட்டத்தின் முத்தூர், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் விவேகானந்தா மற்றும் கொங்கு கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை கவனித்து வந்தார். இவரது நிர்வாகத்தின் கீழ் 4 சிபிஎஸ்இ பள்ளிகளும், 2 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாலை, ஈரோடு ரயில் நிலையத்தின் 2-வது நடைமேடையில் அமர்ந்திருந்த சக்திவேல், அங்கு வந்த சரக்கு ரயில் முன்பு திடீரென பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கயம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியை வாங்கி அதன் நிர்வாகப் பொறுப்பையும் சக்திவேல் ஏற்றிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட கூடுதல் வேலைப்பளு மற்றும் பணி நெருக்கடியால், கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், அதற்காக மருத்துவச் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த சக்திவேலுக்கு ரமணி (47) என்ற மனைவியும், 16 வயது மகளும், 5 வயது மகனும் உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த யாராவது கடுமையான மன அழுத்தம், நம்பிக்கையின்மை அல்லது தற்கொலை எண்ணங்களால் அவதிப்பட்டால், குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனநல நிபுணர்களிடம் உடனடியாக உதவி பெறுவது மிகவும் முக்கியம்.
