30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள விலை உயர்ந்த ஸ்டார் ஹோட்டல்களில் தங்கி, பணம் செலுத்தாமல் மோசடி செய்து வந்ததாகக் கூறப்படும் 69 வயது முதியவர் ஜானின் சுவாரசியமான பின்னணி
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 69 வயதான ஜான், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆங்கில வழிக் கல்வியில் படித்த அவர், சுற்றுலா வழிகாட்டியாக (Tourist Guide) பணியாற்றி வந்துள்ளார்.
அந்த அனுபவத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜான், பெரும்பாலும் ஐந்து நட்சத்திரம் மற்றும் ஏழு நட்சத்திரம் போன்ற உயர்தர ஹோட்டல்களில் மட்டுமே தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
வழக்கமாக இரண்டு பைகளுடன் ஹோட்டலுக்கு வரும் ஜான், அறையில் தங்கி அங்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் முழுமையாகப் பயன்படுத்துவார். ஆங்கிலத்தில் சரளமாகவும் மென்மையாகவும் பேசியதால், அவர் மீது ஹோட்டல் ஊழியர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழுந்ததில்லை. தன்னை ஆங்கில ஆசிரியர், சுற்றுலா வழிகாட்டி அல்லது யோகா பயிற்சியாளர் என அறிமுகப்படுத்திக் கொண்டு நம்பிக்கை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
ஜானுக்கு மது மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லையென்றாலும், விலை உயர்ந்த மதுபானங்களையும் சிகரெட் பாக்கெட்டுகளையும் ஆர்டர் செய்து, பின்னர் அவற்றை வெளியே எடுத்துச் சென்று விற்று பணமாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், அறையில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களையும் எடுத்துக் கொண்டு, ஹோட்டலில் முறையாக செக்-அவுட் செய்யாமல் அங்கிருந்து தப்பிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தான் அறையை காலி செய்து சென்றது உடனடியாக தெரியக்கூடாது என்பதற்காக, செய்தித்தாள்கள் நிரப்பப்பட்ட ஒரு பையை மட்டும் அறையிலேயே விட்டுச் செல்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ஹோட்டல்களில் இதே முறையைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, ஜார்கண்ட், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஜான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2016ஆம் ஆண்டு டெல்லி காவல்துறையாலும், 2020ஆம் ஆண்டு நவி மும்பை காவல்துறையாலும் அவர் பலமுறை கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில் தனது சொந்த ஆதார் அட்டையை பயன்படுத்தி ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்த ஜான், பின்னர் ஆதார் அட்டையின் நகல்களை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
விசாரணையின்போது, “ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கேட்டபோது, ஒரு முறை ஸ்டார் ஹோட்டலில் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும், அந்த அவமானத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாகவும் ஜான் தெரிவித்ததாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், தனக்கு 10 ஏக்கர் பரம்பரை நிலம் இருப்பதாகவும், இனி கோவாவில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கித் தனது மீதமுள்ள வாழ்க்கையை கழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு, இதுவே தனது கடைசி மோசடி என்றும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும் காவல்துறையிடம் ஜான் உறுதியளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
