கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தோல் அல்லாத காலணி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில், முதலமைச்சர் விஜய் எளிமையான செயல்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
அரசு விழாவின் போது, அங்கு வந்திருந்த தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், “சார்… உங்களுடைய கையெழுத்து போட்டு கொடுங்கள்” என்று முதலமைச்சர் விஜயிடம் கேட்டார். அதற்கு எவ்வித தயக்கமும் காட்டாமல், புன்னகையுடன் உடனடியாக கையெழுத்திட்டு வழங்கினார்.
அரசு நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்தும் எளிமையான மற்றும் இணக்கமான அணுகுமுறை, விழாவில் பங்கேற்றிருந்தவர்களின் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிகழ்வில் அடிக்கல் நாட்டப்பட்ட தொழிற்சாலை, உலகப் புகழ்பெற்ற ஜெர்மன் விளையாட்டு உபகரண நிறுவனமான Adidas நிறுவனத்திற்கான காலணிகளை உற்பத்தி செய்யும் ஆலையாகும்.
Phoenix Kothari நிறுவனமும், தைவானைச் சேர்ந்த Evervan குழுமமும் இணைந்து, கரூர் மாவட்டம் மணவாசி பகுதியில் ரூ.1,700 கோடி முதலீட்டில் இந்த பிரம்மாண்ட தொழிற்சாலையை அமைக்க உள்ளன.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, சென்னைக்கு வெளியே தொழில்துறை முதலீட்டுக்காக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அடிக்கல் நாட்டிய முதல் மிகப்பெரிய தொழிற்திட்டம் இதுவாகும்.
இந்த தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு, கரூர் மாவட்டத்தில் 13,500-க்கும் மேற்பட்டோருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தோல் அல்லாத காலணி உற்பத்தித் துறையில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து பெரும்பாலான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆலையில் ஆண்டுதோறும் சுமார் 4 கோடி ஜோடி காலணிகளை உற்பத்தி செய்வதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
