கரூரில் இன்று முதலமைச்சர் விஜய் ஆற்றிய அரசியல் உரை, அரசுப் பள்ளி வகுப்பறைகளில் உள்ள டிஜிட்டல் திரைகள் மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் நடைபெற்ற முதலமைச்சர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் அரசியல் உரையை, அரசுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து பார்ப்பது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் போர்டுகள் மற்றும் டிஜிட்டல் திரைகள், தற்போது ஆளுங்கட்சியின் அரசியல் பரப்புரைக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற விமர்சனங்களும் இதன் மூலம் மீண்டும் எழுந்துள்ளன.
குறிப்பாக, “கல்விக்கூடங்கள் அரசியல் மேடைகள் அல்ல; அரசியல்வாதிகள் மாணவர்களை நேரடியாகச் சந்திக்க அனுமதியில்லை” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த உத்தரவு வெளியான மறுநாளே முதலமைச்சரின் உரை பள்ளிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோ வெளியாகியிருப்பது சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, காஞ்சிபுரம் அரசுப் பள்ளியில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை பயன்படுத்தி ரீல்ஸ் வீடியோ எடுத்ததாகக் கூறி, தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ எந்த பள்ளியில் பதிவு செய்யப்பட்டது, அது உண்மையா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி, உண்மை நிலையை பொதுமக்கள் முன் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
