இன்னொன்றையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது வெறும் சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும்தானா என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை என்பதுதான். இது சமூக ஒழுங்கு, சமூக ஒழுக்கம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துடனும் நெருங்கிய தொடர்புடையது.
ஒவ்வொரு தனிமனிதனும் ஒழுக்கத்துடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொண்டாலே, அந்த சமூகமும் தானாகவே நல்ல மாற்றத்தை நோக்கி நகரும். இத்தகைய கட்டுப்பாடும் பொறுப்புணர்வும் இருந்தாலே, பல்வேறு சமூகப் பிரச்சனைகளை நாம் கட்டுப்படுத்த முடியும்.
படிக்கும் இடங்களிலும், பணிபுரியும் இடங்களிலும், பயண நேரங்களிலும், அன்றாட வாழ்க்கையின் அனைத்து சூழல்களிலும் பெண்கள் பயமின்றி, பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் வாழ வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே நமது முதல் இலக்காக இருக்க வேண்டும்.
இதுவரை நான் இதைப் பற்றி மிகவும் மென்மையாகப் பேசி வந்தேன். ஆனால் பெண்களைத் தொந்தரவு செய்துவிட்டு எளிதாக தப்பித்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பெண்களின் பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித சமரசமும் காட்டப்படாது. அவர்களுக்கான தண்டனைகளும், சட்ட நடவடிக்கைகளும் காவல்துறையால் மிகவும் கடுமையாக மேற்கொள்ளப்படும். அவர்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் மற்றும் குற்றப்பத்திரிகைகள் விரைவாகத் தயாரிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படும்.
அதே நேரத்தில், இந்த வேகமான நடவடிக்கைகளின் காரணமாக எந்த நிரபராதியும் தண்டிக்கப்படக்கூடாது என்பதையும் காவல்துறை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். தவறு செய்தவர்களுக்கு மட்டுமே நீதிமன்றத்தின் மூலம் உரிய மற்றும் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்பட வேண்டும்.
அப்போதுதான், அந்த தண்டனைகளைப் பார்த்து தவறு செய்ய நினைப்பவர்களுக்குக் கூட, தவறு செய்யக்கூடாது என்ற அச்சமும் விழிப்புணர்வும் ஏற்படும்.
