பிரபல தென்னிந்திய நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனது கடந்த காதல் உறவு குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த உறவில் தீவிரமான மனரீதியான மற்றும் உடல்ரீதியான கொடுமைகளை எதிர்கொண்டதாகவும், அதிலிருந்து மீண்டு வந்து தற்போது தனது வாழ்க்கையைத் தானே தேர்ந்தெடுத்து நிம்மதியாக வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான அனுபமா, கடந்த ஜூலை மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இன்றிலிருந்து நான் என் குரலைத் தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறேன். இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை. பயமும் இல்லை” என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளானது.

தனது கடந்த கால உறவு குறித்து பேசிய அனுபமா, காதல் தொடங்கிய சில மாதங்களிலேயே இரு குடும்பத்தினருக்கும் இடையே திருமணப் பேச்சு தொடங்கியதாகக் கூறியுள்ளார். மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தத்தை எங்கு நடத்துவது, எத்தனை பேர் அழைக்கப்பட வேண்டும் என்பது குறித்து பேசும் அளவுக்கு அந்த உறவு சென்றதாகவும், ஆனால் தனக்கு ஏற்பட்ட அச்சம் காரணமாக நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து தள்ளிப்போட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த உறவில் தான் சந்தித்த அனுபவங்களைப் பற்றி பேசிய அவர், ஒரு நாள் அளவுக்கு அதிகமான அன்பை வெளிப்படுத்தும் நபர், அடுத்த நாளே முற்றிலும் மாறி கொடூரமாகவும், கட்டுப்படுத்தும் மனப்பான்மையுடனும் நடந்து கொள்வார் என தெரிவித்துள்ளார். அதன்பிறகு குழந்தையைப் போல அழுது மன்னிப்புக் கேட்டு, இனி இதுபோல் நடக்காது என உறுதியளிப்பார் என்றும் கூறியுள்ளார்.
இந்த மாற்றங்கள் தொடர்ச்சியான ஒரு சுழற்சியாக மாறி, அந்த நபர் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற மனநிலைக்கு தன்னைத் தள்ளியதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார். தனது முன்னாள் காதலரின் குணமாற்றங்களை, நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், அந்த நபரைப் புரிந்துகொள்வதே மிகவும் கடினமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் என்ன உடை அணிய வேண்டும் என்பதற்குக்கூட புகைப்படம் அனுப்பி அனுமதி பெற வேண்டியிருந்ததாகவும், தான் நடித்த ‘டிராகன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தடுக்கப்பட்டதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

இந்த தொடர் கட்டுப்பாடுகள் மற்றும் மனரீதியான கொடுமைகளால் தான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும், கடுமையான உடல் எடைக் குறைவைச் சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் உணர்வுப்பூர்வமான போராட்டங்களும் இருப்பதாகக் கூறிய அனுபமா, முழுமையாகக் குணமடைந்த பிறகே தனது அனுபவத்தைப் பற்றி பேச வேண்டும் எனக் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார். நடிகை மடோனா செபாஸ்டியன் மனரீதியான கொடுமைகள் குறித்து பேசிய ஒரு வீடியோவைப் பார்த்த பிறகுதான், தான் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் இருந்தேன் என்பதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

தன்னைப் போலவே நச்சு உறவுகளில் சிக்கி, தாங்கள் எதிர்கொள்வது வன்முறை என்பதையே உணராமல் பலர் தவித்து வருவதாக அனுபமா தெரிவித்துள்ளார். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே தனது அனுபவத்தைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனுபமா தனது பேட்டியில் முன்னாள் காதலரின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும், அவர் நடிகர் துருவைத்தான் குறிப்பிட்டிருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அனுபமாவும் துருவும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
