நீலகிரி மாவட்டம் குன்னூரில், பேருந்து நிலையம் அருகே மையப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், குழந்தையுடன் உணவு உட்கொண்டபோது பொங்கலில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே, டிடிகே செல்லும் சாலையில் சைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வந்து உணவு உட்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில், பிரவீன் என்பவர் தனது குழந்தையுடன் அந்த உணவகத்திற்குச் சென்று பொங்கல் மற்றும் இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பொங்கலில் பெரிய அளவிலான கரப்பான் பூச்சி ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, உடனடியாக உணவக உரிமையாளரிடம் அவர் முறையிட்டுள்ளார். ஆனால், உரிமையாளர் முறையான பதில் அளிக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குன்னூர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக முறையான ஆய்வு மேற்கொண்டு, விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
