வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த தாமரைச்செல்வி, பணி முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட குடும்பத் தகராறில் அவரது கணவர் அரவிந்தனால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த தாமரைச்செல்வி, பணி முடிந்து இன்று இரவு சுமார் 6:30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கும் அவரது கணவர் அரவிந்தனுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அரவிந்தன் கத்தியால் தாமரைச்செல்வியை குத்தியதில் பலத்த காயமடைந்த தாமரைச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த குடியாத்தம் காவல் துறையினர் உயிரிழந்த தாமரைச்செல்வியின் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை நடந்ததாகத் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட தடயங்களையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தாமரைச்செல்வியின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தம்பதியருக்கிடையே ஏற்கனவே குடும்பப் பிரச்சினைகள் இருந்தனவா,? சம்பவத்துக்கு முன்பு என்ன நடந்தது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளன
பெண் தலைமைக் காவலர் ஒருவர் குடும்பத் தகராறில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் விசாரணையின் முடிவில், இந்தக் கொலை தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
