புதுச்சேரி அடுத்த கோட்டகுப்பத்தில் மயானத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பத்தில் பட்டியலின மக்கள் மயானத்தை பயன்படுத்துவது தொடர்பாக மீனவர்கள் – பட்டியல் இனத்தவர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நேரில் வந்து ஆய்வு நடத்தி இருதரப்பினர் இடையே சமூக நல்லிணக்கம் ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மக்கள்- மீனவ மக்களிடையே நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. மேலும், நீதிமன்ற தீர்ப்பின்படி அப்பகுதியில் மயானத்திற்கு தேவையான இடத்தை அளந்து வேலி அமைக்கும் வேண்டுமென அரசு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து கோட்டகுப்பம் மயான பகுதியில் தாசில்தார் தலைமையில் அளவிடப்படும் என அறிவிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் மீனவ பெண்கள் தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழுத்தில் கயிறை மாற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என காவல்துறையை மிரட்டியதுடன், கடலில் இறங்கி போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுக்கவே போலீசார் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் கம்பி வேலி அமைக்க மயான இடத்தை அளக்க முயன்றனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மீனவ பெண்கள் மயானத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் மீனவ பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி மயானத்தை அளந்து அடிக்கல் நாட்டினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
