இந்தியாவில் வசித்து வரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த அனஸ்தேசியா ஷரோவா, இந்தியா குறித்த தனது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நிலையில், அவரது கருத்துகள் இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்தியா குறித்து வெளிநாடுகளில் நிலவும் பல தவறான எண்ணங்களை உடைக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தியாவில் இந்தி மொழி மட்டுமல்லாமல், 22 அதிகாரப்பூர்வ மொழிகளும், 121 முக்கிய மொழிகளும் பயன்பாட்டில் இருப்பதைக் கண்டு அவர் வியப்புத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் யூ.பி.ஐ. பணப் பரிவர்த்தனை முறை மற்றும் ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக சேவையின் வேகத்தையும் அவர் பாராட்டியுள்ளார். ஒரு பொத்தானை அழுத்திய சில நிமிடங்களிலேயே பொருட்கள் வீடு தேடி வந்து சேர்வது தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா “அழுக்கான மற்றும் பாதுகாப்பற்ற நாடு” என்ற வெளிநாடுகளில் நிலவும் பொதுவான கருத்துக்கு மாறாக, நாடு மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்களாகவும் உதவிகரமானவர்களாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்கள் பொதுவாக யாரிடமும் நேரடியாக “இல்லை” என்று கூறுவதில் தயக்கம் காட்டுவதாகவும், எனவே அவர்களின் பேச்சின் உள்அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, எப்போதும் மாற்றுத் திட்டம் ஒன்றை வைத்திருப்பது நல்லது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் ஒருமுறை சமைத்த உணவை, குறிப்பாக சூப் போன்றவற்றை, மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை பயன்படுத்துவது வழக்கம் என்றும், ஆனால் இந்தியாவில் பெரும்பாலானோர் தினமும் மூன்று வேளையும் புதிதாக சமைத்த உணவையே விரும்பி சாப்பிடுவது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யர்களின் இயல்பான முகபாவனை சற்று இறுக்கமாக இருக்கும். இந்தியாவில் தன்னுடைய முகபாவனையைப் பார்த்து பலரும் தாம் கோபமாகவோ அல்லது வருத்தமாகவோ இருப்பதாக தவறாகப் புரிந்துகொள்வதாகவும், இதை அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா குறித்த வெளிநாட்டினரின் பழைய காலத்துச் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாட்டின் உண்மையான வளர்ச்சியையும் மக்களின் அன்பையும் பாராட்டியுள்ள அனஸ்தேசியா ஷரோவாவின் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
