நீரிழிவு நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், மருத்துவ உலகில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தினமும் இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய நிலைக்கு மாற்றாக, வாரத்திற்கு ஒருமுறை மட்டும் செலுத்தினால் போதுமான புதிய இன்சுலின் மருந்தை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் (Novo Nordisk) நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
‘ஆவிக்லி’ (Awiqli) என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த மருந்து, இன்சுலின் ஐகோடெக் (Insulin Icodec) என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் சிகிச்சையில் இது ஒரு முக்கிய மருத்துவப் புரட்சியாகக் கருதப்படுகிறது.
தற்போது தினசரி இன்சுலின் ஊசி செலுத்தி வரும் நோயாளிகள், இந்த புதிய மருந்தின் மூலம் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இன்சுலின் செலுத்தினால் போதுமானதாக இருக்கும். இதனால், ஆண்டுக்கு 365 ஊசிகள் செலுத்த வேண்டிய நிலை, வெறும் 52 ஊசிகளாகக் குறைகிறது.
இந்த மருந்தை டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.
இந்த இன்சுலின், இரத்தத்தில் உள்ள அல்புமின் (Albumin) என்ற புரதத்துடன் இணைந்து, உடலுக்குத் தேவையான இன்சுலினை ஏழு நாட்கள் வரை மெதுவாகவும் சீராகவும் வெளியிடுகிறது. இதை தொடை, கை அல்லது வயிற்றுப் பகுதியில், ஃபிளெக்ஸ்டச் (FlexTouch) பேனா சாதனத்தின் மூலம் எளிதாகச் செலுத்திக் கொள்ளலாம்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த மருந்து அறிமுகமாகும் ஏழாவது நாடாக இந்தியா இணைந்துள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக உள்ளது. நாட்டில் சுமார் 10 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 10 கோடி பேர் ‘ப்ரீ-டயாபெடிக்’ நிலையில் இருப்பதாக மருத்துவத் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்போது சுமார் 60 லட்சம் பேர் தினமும் இன்சுலின் ஊசி செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
தினசரி ஊசி செலுத்துவதால் ஏற்படும் வலி, தோல் பாதிப்பு, மனஅழுத்தம் மற்றும் சிகிச்சையைத் தவிர்க்கும் மனநிலை போன்ற சிரமங்களை இந்த புதிய வாராந்திர இன்சுலின் கணிசமாகக் குறைக்கும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மருந்து தற்போது சந்தையில் உள்ள தினசரி இன்சுலினுடன் ஒப்பிடும்போது ஓரளவு குறைந்த விலையிலும் கிடைக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை செலுத்தும் 70 யூனிட் டோஸின் விலை சுமார் ரூ.261 என்றும், ஒரு மாதச் செலவு சுமார் ரூ.1,045 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 700 யூனிட்கள் கொண்ட 1 மில்லி ஃபிளெக்ஸ்டச் பேனாவின் விலை ரூ.2,611 ஆகவும், 2,100 யூனிட்கள் கொண்ட 3 மில்லி பேனாவின் விலை ரூ.7,833 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்த மருந்தை மருத்துவரின் ஆலோசனை இன்றி சுயமாக வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நீரிழிவு சிகிச்சை நிபுணர் அல்லது குடும்ப மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே இந்த இன்சுலினை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமும் இன்சுலின் ஊசி செலுத்த வேண்டிய கட்டாயத்தை குறைத்து, வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே இன்சுலின் செலுத்தும் வசதியை வழங்கும் இந்த புதிய சிகிச்சை முறை, உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் நம்பிக்கையையும், மருத்துவ உலகிற்கு ஒரு புதிய மைல்கல்லையும் உருவாக்கியுள்ளது.
