நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) மறுதேர்வு இன்று (ஜூன் 21) பலத்த பாதுகாப்பு மற்றும் கடுமையான கண்காணிப்புகளுடன் வெற்றிகரமாக நடைபெற்றது.
முன்னதாக மே மாதத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு தொடர்பான புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு அந்தத் தேர்வை ரத்து செய்து மறுதேர்வை அறிவித்திருந்தது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தொடங்கிய தேர்வு, மாலை 5.15 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
முறைகேடுகளைத் தடுக்க, தேசிய தேர்வு முகமை (NTA) நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு கேமராக்கள், ஜாமர்கள், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அஞ்சல் துறை அதிகாரிகளின் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும், முழுமையாக மூடப்பட்ட காலணிகள், நகைகள் உள்ளிட்டவற்றை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடுமையான சோதனைகளுக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு அறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த முறை, மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்பட்டு, மொத்தம் 195 நிமிடங்கள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற தேர்வுடன் ஒப்பிடுகையில், இன்றைய மறுதேர்வின் வினாத்தாள் மிதமானது முதல் கடினமானது வரை இருந்ததாக பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இயற்பியல் பாடத்தில் இடம்பெற்ற கேள்விகள் மிகவும் சவாலானவையாக இருந்ததுடன், கணக்கீடுகள் செய்வதற்கு அதிக நேரம் எடுத்ததாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
வேதியியல் பகுதி ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தாலும், சில கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். உயிரியல் பகுதி வழக்கம்போல நேரடியான மற்றும் எளிமையான கேள்விகளைக் கொண்டிருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இயற்பியல் பாடத்தில் நீண்ட கணக்கீடுகள் இடம்பெற்றிருந்ததால், கூடுதலாக வழங்கப்பட்ட 15 நிமிடங்களையும் மீறி, சில கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நேரம் முடிந்துவிட்டதாக பல மாணவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் நடைபெற்ற தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த மாணவர்கள் கூட, இந்த முறை வினாத்தாள் கடினமாக இருந்ததால், கடந்த முறையை விட குறைவான மதிப்பெண்கள் கிடைக்கக்கூடும் என்ற அச்சத்துடனே தேர்வை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ராணுவ பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டதால், இந்த முறை தேர்வு முறைகேடுகள் ஏதுமின்றி பாதுகாப்பாக நடைபெற்றதாக மாணவர்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர்.
இந்த முறை வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததால், அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றும், அதன் காரணமாக மருத்துவப் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டுகளை விட கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக கல்வி நிபுணர்கள் கணித்துள்ளனர்.
