உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள புராணியா கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கட்டிடத்தின் மேல்தளங்களில் இருந்து கீழே குதித்த பலருக்கும் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த தீவிபத்து, அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் வேகமாக பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், 14 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டனர்.
இந்த விபத்தில், பயிற்சி வகுப்பில் இருந்த 11 மாணவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த 10 முதல் 12 பேர் வரை இன்னும் சிக்கியிருக்கலாம் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
அடர்த்தியான குடியிருப்புப் பகுதியின் மையப்பகுதியில் அமைந்திருந்த இந்த பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ, மிக வேகமாக பரவியதால், முதற்கட்டத்தில் தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்திற்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர், அவர்கள் எந்த பகுதியில் உள்ளனர் என்பதைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்கிடையில், உயிர் தப்புவதற்காக சிலர் மேல்தளங்களில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில் பலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மீட்புப் பணிகளை நேரடியாக கண்காணித்து, மாவட்ட நிர்வாகம் உடனடி மற்றும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இந்த தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிக்கியிருக்கக்கூடியவர்களை மீட்கும் பணிகளும், தீயை முழுமையாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
