தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஒட்டுமொத்த அரசியல் களத்தின் பார்வையும் அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நோக்கித் திரும்பியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராகப் பதவி வகித்து வரும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமியை பதவியில் இருந்து விலகச் சொல்லி த.வெ.க அரசு அழுத்தம் கொடுக்க, அதற்கு ஜோதி நிர்மலா சாமி பிடிவாதமான மறுத்து வருகிறார்.
குறுக்கே நிற்கும் சட்டம்
கடந்த முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் 2024 மார்ச் மாதம் மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் ஜோதி நிர்மலாசாமி. கடந்த மாதம் அவர் தனது ஐ.ஏ.எஸ் அதிகாரப்பூர்வப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட போதிலும், தேர்தல் ஆணையராகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக, தங்களுக்கு ஒத்துப்போகும் ஒரு அதிகாரியைக் கொண்டு நடத்த வேண்டும் என்பதில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு மிகத் தீவிரமாக உள்ளது.

ஆனால், மற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை ஒரு அரசாணை மூலம் மிக எளிதாக மாற்றுவதைப் போல மாநில தேர்தல் ஆணையரை த.வெ.க அரசால் அவ்வளவு எளிதாகத் தூக்கிவிட முடியாது. ஏனெனில், இந்தத் பதவிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆர்டிகல் 243கே-ன் கீழ் மிகப்பெரிய பாதுகாப்பு அரணை வழங்கியுள்ளது.
தப்பு செய்து விட்டோமோ..? மீண்டும் ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..! CM விஜயின் கறார் மூவ்..!
சட்ட விதி என்ன சொல்கிறது?
ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை எந்தவொரு கடுமையான நாடாளுமன்றக் குற்றச்சாட்டுத் தீர்மான முறைப்படி மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியுமோ, அதே போன்ற மிகக் கடினமான சட்ட நடைமுறையைப் பின்பற்றினால் ஒழிய மாநில தேர்தல் ஆணையரை யாராலும் நீக்க முடியாது. மேலும், இவரது நியமனத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கட்டாயம் தேவை.
ஆளுநரின் தற்போதைய உத்தரவுப்படி, ஜோதி நிர்மலாசாமிக்கு ஐந்து ஆண்டுகள் 2029 வரை பதவிக்காலம் உள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகள் முழுமையாக இருக்கும் நிலையில், அவரை நீக்குவது த.வெ.க அரசுக்கு அக்னிப் பரீட்சையாக மாறியுள்ளது.
தேர்தல் ஆணையரின் பிடிவாதம்
தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்ற பிற வாரியங்களின் தலைவர்கள் த.வெ.க அரசு சொன்னவுடன் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். அதே பாணியில் ஜோதி நிர்மலாசாமியிடமும் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி அரசு தரப்பில் இருந்து கடுமையான வாய்மொழி அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டின் வீரதீர செயலுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜோதி நிர்மலாசாமி, இந்த மிரட்டல்களுக்கு அஞ்சுவதாக இல்லை. “நான் தற்பொழுது ராஜினாமா செய்யும் முடிவில் இல்லை” என்று கூறி கோட்டைக்கு அதிரடி ‘செக்’ வைத்துள்ளார்.
சிக்கலில் த.வெ.க-வின் உள்ளாட்சி வியூகம்
தற்போது தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கான வார்டு மறுவரையறை கமிட்டியின் தலைவராகவும் ஜோதி நிர்மலாசாமி தான் செயல்பட்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முந்தைய மிக முக்கியப் பணி இது.
இந்த வார்டு மறுவரையறைப் பணிகளைத் தன் கைகளால் முழுமையாக முடிக்கும் வரை பதவியில் நீடிக்கப் போவதாக அவர் பிடிவாதமாக இருக்கிறார். இவர் பதவியில் நீடித்தால், தேர்தல் வார்டுகள் தங்களுக்குச் சாதகமாக பிரிக்கப்படாமல் போகலாம் என த.வெ.க மேலிடம் பதற்றமடைந்துள்ளது.
