1995-ம் ஆண்டு பேட்ச் தமிழக கேடர் அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறையின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒருவர். முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் உளவுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை டி.ஜி.பி எனப் பம்பரமாகச் சுழன்று, காவல்துறையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர். தி.மு.க தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்ட இவர், த.வெ.க ஆட்சிக்கு வந்தவுடன் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, தற்பொழுது காக்கி வாசமே இல்லாத, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் டி.ஜி.பி மற்றும் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
2028-க்குள் உளவுத்துறை கனவு
வரும் 2028-ம் ஆண்டு பணி ஓய்வு பெறவிருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், தனது ஓய்வுக்கு முன்பாக எப்படியாவது மீண்டும் ‘உளவுத்துறை டி.ஜி.பி’ என்ற அதிகாரமிக்க நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதைத் தனது ஒரே நோக்கமாகக் கொண்டு களம் இறங்கியுள்ளார். இதற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தான் லாபி.

தமிழ்நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் செயல்பட்டு வரக்கூடிய சில சக்திவாய்ந்த கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் உயர் நிர்வாகிகள் மூலமாக முதல்வர் விஜய்க்கு மறைமுகமாகவும், முதல்வருக்கு மிக அருகில் இருக்கும் முதன்மை நபர்களுக்கு நேரடியாகவும் அடுக்கடுக்கான நெருக்கடிகளையும், நிர்பந்தங்களையும் கொடுத்து வருகிறார்.
உயரதிகாரிகளின் குமுறல்
மாற்றத்தை நோக்கி… என்று முழங்கி ஆட்சியைப் பிடித்த முதல்வர் விஜய், இந்தத் தூதுவர்களுக்கும் மத ரீதியான அழுத்தங்களுக்கும் பணிந்து விடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க ஆட்சியில் கோலோச்சிய அதே அதிகாரிகளுக்கு, த.வெ.க ஆட்சியிலும் அதே முக்கியப் பதவிகள் தாராளமாக வழங்கப்பட்டால், ‘தி.மு.க ஆட்சிக்கும் த.வெ.க ஆட்சிக்கும் என்னதான் வித்தியாசம்?’ என்ற கடுமையான விமர்சனம் பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் எதிரிகள் மத்தியிலும் எழும் என முதல்வர் விஜய் தரப்பிடம் சில நேர்மையான உயரதிகாரிகள் தற்போதே புலம்பத் தொடங்கியுள்ளனர்.

“இன்ஸ்பெக்டருக்கே சவால் விட்ட பிக்பாஸ் திவாகரை மதுரையில் வளைத்துத் தூக்கிய சென்னை தனிப்படை!”
ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியின் இந்த பிடிவாதமும், அதற்குப் பின்னணியில் இருக்கும் மதத் தொண்டு நிறுவனங்களின் அழுத்தங்களும் த.வெ.க அரசின் நிர்வாகச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே பார்க்கப்படுகிறது. நெருக்கடிகளுக்குப் பணிந்து திமுக பாணி அரசியலுக்கு விஜய் பச்சைக் கொடி காட்டப் போகிறாரா? அல்லது அழுத்தங்களை உடைத்தெறிந்து த.வெ.க ஆட்சியை நிலைநாட்டப் போகிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
