https://republictn.com/

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தையின் முகத்தை சாக்குப்பையால் மூடி துன்புறுத்திய ஊழியர் கலைச்செல்வியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் அவரை பணியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாவூர்சத்திரம் வெண்ணிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

அங்கன்வாடி மையத்திற்கு வந்த பிஞ்சுக் குழந்தை ஒன்று தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர் கலைச்செல்வி, குழந்தையை மிரட்டுவதற்காகவும் அதன் அழுகையை நிறுத்துவதற்காகவும் ஒரு சாக்குப்பையை எடுத்து குழந்தையின் முகத்தையும் உடலையும் மூடி கொடூரமாக துன்புறுத்தியுள்ளார்.

இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அங்கு இருந்த ஒருவரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. வீடியோ வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து, அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பாவூர்சத்திரம் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியை கைது செய்தனர்.

மேலும், சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து, கலைச்செல்வி பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக, குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (Juvenile Justice Act) பிரிவு 75-ன் கீழ் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ள ஒருவர் அவர்களுக்கு உடல் அல்லது மனரீதியான துன்புறுத்தல் ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும்.

மேலும், குழந்தையின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மிரட்டல் மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் மிக முக்கியமாகக் கருதப்படுவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சகிப்புத்தன்மையற்ற கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அங்கன்வாடி மையத்தில் குழந்தை மீது நடத்தப்பட்ட இந்த கொடூர சம்பவம், தென்காசி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 day ago at 1 day ago