சென்னையின் பெரம்பூர் ரயில் நிலையத்தில் மர்மமான முறையில் ஒரு சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் நீண்ட நேரமாக ஒரு சூட்கேஸ் கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் கவனித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார், சந்தேகத்திற்கிடமாக இருந்த அந்த சூட்கேஸை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது, சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இருப்பது தெரியவந்தது.
மேலும், சடலத்தின் கை, கால்களும் வெட்டப்பட்டு, உடல் துணியில் சுற்றி மடக்கப்பட்டு சூட்கேஸுக்குள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த காட்சியை கண்ட போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொலை பெரம்பூர் பகுதியில் நடைபெற்றதா அல்லது வேறு மாவட்டம் அல்லது மாநிலத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை ரயில் மூலம் கொண்டு வந்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் வீசிச் சென்றார்களா என்ற பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் துண்டிக்கப்பட்ட ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட இந்த சம்பவம், சென்னை முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
