https://republictn.com/

கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த வாரம் காணாமல் போன 10 வயது சிறுமி, கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளம்பில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதற்கட்ட காவல்துறை விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் 24 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கை நடத்தினர்.

இதற்கிடையில், வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இந்த கொடூர வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இருவர்மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி ரம்யா பாரதி பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குண்டர் சட்டம் அமல்படுத்த உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் காயமடைந்த கார்த்திக், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வழக்கில் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கைது செய்யப்பட்ட இருவரையும் மூன்று நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 days ago at 3 days ago