பிக்பாஸ் மற்றும் சமூக வலைதள பிரபலமான ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர், யூடியூப் சேனல் ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை கீழ்ப்பாக்கம் போலீசாரால் மதுரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிக்கச் சென்றபோது, அங்கிருந்த ஊழியர்களை தரக்குறைவாகப் பேசியதுடன், கேமரா உள்ளிட்ட யூடியூப் சேனலின் உபகரணங்களை சேதப்படுத்தியதாக, அந்த சேனலில் பணியாற்றும் கார்த்திக் என்பவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில், ஆபாசமாகப் பேசுதல், தனியார் சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கீழ்ப்பாக்கம் போலீசார் திவாகர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு திவாகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், தன் மீது திட்டமிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் கார்த்திக்கிடம் பணம் பெற்றுக்கொண்டு தன் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்த வீடியோவை நீக்குமாறு யூடியூப் சேனல் ஊழியர் கார்த்திக் திவாகரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, வீடியோவை நீக்க வேண்டுமெனில் ₹1 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கார்த்திக் தனது புகாரில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தன் மீது அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், திவாகர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கார்த்திக் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், மதுரையில் இருந்த திவாகரை கைது செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த திவாகர், இன்ஸ்டாகிராமில் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ என்ற பெயரில் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.
அதே நேரத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு தளங்களில் சக போட்டியாளர்களுடன் ஏற்பட்ட மோதல்கள், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்த சம்பவம், நடிகை ஷகீலாவுடன் ஏற்பட்ட சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களால் திவாகர் தொடர்ந்து சர்ச்சைகளில் இடம்பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
