அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபரான பில் கேட்ஸ், தனது திருமணத்திற்குப் பிறகும் மூன்று பெண்களுடன் உறவு கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களில் ஒருவர் ரஷ்ய அணு விஞ்ஞானி ஆவார். அமெரிக்க காங்கிரஸ் குழுவின் முன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அளித்த சாட்சியத்தில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனக்கு மூன்று பெண்களுடன் உறவு இருந்ததை வெளிப்படுத்தினார். இந்த உறவுகளைக் கொண்டு, பிரபல பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தன்னை மிரட்டியிருக்கலாம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
எப்ஸ்டீனின் வலையமைப்பு, அவருடன் தொடர்புடையவர்கள் குறித்த அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் மேற்பார்வைக் குழுவின் விசாரணையின் போது இந்த விவகாரம் வெளிவந்துள்ளது. நீதித்துறை கூடுதல் ஆவணங்களை வெளியிட்ட பிறகு, வழக்கறிஞர்கள் பில்கேட்ஸின் சாட்சியத்தைக் கேட்டனர். இந்த ஆவணங்கள், இழிவான நிதியாளரான எப்ஸ்டீனுடன் பில்கேட்ஸின் கடந்தகால தொடர்புகள் குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன. எப்ஸ்டீன் 2019-ல் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சிறையில் இறந்தார். எப்ஸ்டீன் பைல்ஸ உலகெங்கிலும் உள்ள பல வெள்ளை காலர் குற்றவாளிகளை அம்பலப்படுத்தியுள்ளது.
பில் கேட்ஸ் ஜூன் 10 அன்று குழுவின் முன் தானாக முன்வந்து ஆஜரானார். தனது சாட்சியத்தின் போது, பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா, அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா ஆகிய ரஷ்யப் பெண்களுடனான தனது இரண்டு கள்ள உறவுகள் குறித்து எப்ஸ்டீனுக்குத் தெரிந்திருந்தது என்று அவர் வழக்கறிஞர்களிடம் கூறினார். பின்னர், மருத்துவத் தொழில்முனைவோர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசல்ரோட்டுடனான தனது மூன்றாவது கள்ள உறவையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த சாட்சியத்தின் எழுத்துப்பூர்வப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
பில் கேட்ஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம், “இந்தக் கள்ள உறவுகளுக்கும் எப்ஸ்டீனுடனான எனது உறவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவை என் குடும்பத்திற்கு மன உளைச்சலை ஏற்படுத்தின” என்று கூறியது தெரியவந்துள்ளது. எப்ஸ்டீன், எனது துரோகம் பற்றிய தகவல்களையும், எண்ணற்ற பொய்களையும் பயன்படுத்தி, என்னுடன் மீண்டும் இணையுமாறு என்னை வற்புறுத்தி வந்தார்.
எப்ஸ்டீனின் குற்றங்களில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று பில் கேட்ஸ் மறுத்தார். மேலும் அவருடன் தொடர்பைப் பேணுவதற்கான எனது முடிவு ஒரு தவறு என்றும் கூறினார். எப்ஸ்டீனுடனான தனது சந்திப்புகள் முதன்மையாக தொண்டு சார்ந்த பேச்சுக்களாகவே இருந்தன என்று கேட்ஸ் விளக்கினார். “அவர் தண்டிக்கப்பட்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும். அது எனக்கு முன்பே தெரிந்திருந்தது. அவரை ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சந்திக்கும் அபாயத்தை ஏற்க நான் தயாராக இருந்தேன்,” என்று கூறினார்.
விசாரணையின் போது, பில் கேட்ஸ், எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களைச் சுரண்டுவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டு இருந்திருக்கலாம் என்று கூறினார். தனது கள்ள உறவைப் பற்றி அறிந்த பிறகு, எப்ஸ்டீன் “என்னை மிரட்டுவது பற்றி யோசித்தார்” என்று பில் கேட்ஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். “அவர் என்னை ஒருபோதும் மிரட்டவில்லை, ஆனால் இந்த மின்னஞ்சல்களைப் பார்க்கும்போது, அவர் என்னை மிரட்டுவது பற்றி யோசித்திருக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது,” என்றார். இந்தக் கருத்துக்கள், 2013-ல் எப்ஸ்டீன் எழுதிய ஒரு மின்னஞ்சல் வரைவு தொடர்பானவை. அதில் கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை, இருவருக்கும் பொதுவான தொடர்பாளராக இருந்த அவரது முன்னாள் ஊழியர் போரிஸ் நிகோலிக் பற்றிய குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
