ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மியாஸ் நகரில், ஜூன் 21ஆம் தேதி வானம் திடீரென ரத்தச் சிவப்பு நிறமாக மாறிய காட்சி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான நிகழ்வின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
வானம் முழுவதும் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளித்ததால், பலர் இதை அசாதாரண அல்லது அமானுஷ்ய நிகழ்வாகக் கருதி கவலை தெரிவித்தனர். இருப்பினும், இது இயற்கையாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தின் விளைவே என வானிலை ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அந்நாட்டு அவசரக்கால அமைச்சகம் ஏற்கனவே அந்தப் பகுதியில் கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இதன் காரணமாக, வளிமண்டலத்தில் நீர் மற்றும் பனித்துளிகள் நிறைந்த அடர்த்தியான மேகங்கள் சூழ்ந்திருந்தன.
அந்த நேரத்தில் சூரியன் அடிவானத்திற்கு மிகவும் கீழே இருந்ததால், சூரிய ஒளியில் உள்ள குறைந்த அலைநீளம் கொண்ட நீலம் மற்றும் பச்சை நிற ஒளிக்கதிர்கள் மேகங்களால் தடுக்கப்பட்டன. அதே நேரத்தில், அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிற ஒளிக்கதிர்கள் மட்டுமே அடர்ந்த மேகங்களை ஊடுருவிச் சென்றன.
இதன் விளைவாக, வானம் முழுவதும் ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளித்து, அப்பகுதி மக்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
இதேபோன்ற வானிலை நிகழ்வுகள், வளிமண்டல அழுத்தம் மற்றும் மேக அடர்த்தி அதிகமாக இருக்கும் சூழல்களில் உலகின் பல பகுதிகளிலும் அவ்வப்போது பதிவாகி வருவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
