https://republictn.com/

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரை வாழ்த்திப் பேச முற்பட்டபோது, சபாநாயகர் மற்றும் உறுப்பினர்களின் தொடர்ச்சியான குறுக்கீடுகளால் ஏழு முறை அமர வேண்டிய நிலை ஏற்பட்டதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜின் பேச்சால் அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.

மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களின் போது, மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ காமராஜ் முதலமைச்சரை வாழ்த்திப் பேச எழுந்தபோதெல்லாம், இடையிடையே உறுப்பினர்களும் அமைச்சர்களும் குறுக்கிட்டதால் அவரால் தொடர்ந்து பேச முடியாமல் போனது.

இறுதியாக மீண்டும் அவருக்குப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டபோது, “அப்பாடா! நான் முதலமைச்சரை வாழ்த்த நினைக்கும் போதெல்லாம் யாராவது குறுக்கிடுகிறார்கள்; நான் உட்கார்கிறேன். இப்போது இதோடு எட்டாவது முறையாக நான் வாழ்த்துவதற்காக எழுந்திருக்கிறேன்” என்று விரக்தியையும் நகைச்சுவையையும் கலந்து பேசினார்.

அவர் பேசிக்கொண்டிருந்தபோது, மற்ற உறுப்பினர்களும் அவரை நோக்கி நகைச்சுவையாகக் கருத்துகளைத் தெரிவித்து கிண்டலடித்தனர்.

எம்.எல்.ஏ காமராஜ் எட்டாவது முறையாக எழுந்து நிற்பதைக் குறிப்பிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “உறுப்பினர் பேசுவதற்காக இப்படி எட்டு முறை எழுந்து அமர்வது அவருக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி (Good Exercise) தான்” என்று ஜாலியாகக் கூறினார்.

சபாநாயகரின் இந்த நகைச்சுவையான பதிலும், எம்.எல்.ஏ காமராஜின் எதார்த்தமான பேச்சும் அவையில் சிரிப்பலை ஏற்படுத்தின. அதுவரை எந்த முகபாவனையும் காட்டாமல் தீவிரமாக அமர்ந்திருந்த முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் (CM Vijay) கூட தனது சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

இந்த சுவாரஸ்யமான மற்றும் கலகலப்பான தருணத்திற்குப் பிறகு, எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், தனது தொகுதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் சட்டமன்றத்தில் முன்வைத்தார்.

By Eswari

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 weeks ago at 3 weeks ago