அமெரிக்காவில் வசிக்கும் இந்தியத் தம்பதியினர் தங்களுக்குத் தெரியாமலேயே சுமார் ₹8.4 கோடி (சுமார் 850,000 அமெரிக்க டாலர்) கடன் வலையில் சிக்கியதாக வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தங்களின் அன்றாட வாழ்க்கை முறையை கவனிக்காமல், தன்னிச்சையாக எடுத்த “சாதாரண” முடிவுகளே இந்த நிலைக்கு தள்ளியதாக அவர்கள் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவின் ஆடம்பர வாழ்க்கை முறைக்கு ஆசைப்பட்டு, முறையான நிதித் திட்டமிடல் இல்லாததால் பெரும் கடன் சுமை ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களின் கடன் பட்டியலில் :
முதல் வீடு (Primary Home Mortgage) மட்டும் சுமார் 4 லட்சம் டாலர் (சுமார் ₹4 கோடி) அளவுக்கு இருப்பதாகவும், முதலீட்டு சொத்து (Investment Property) கடன் சுமார் 2.7 லட்சம் டாலர் (சுமார் ₹2.7 கோடி) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமையலறை புதுப்பித்தல் (Kitchen Renovation) பணிக்காக 1.5 லட்சம் டாலர் (சுமார் ₹1.5 கோடி) செலவாகியுள்ளதாகவும், கிரெடிட் கார்டு கடன் (Credit Card Debt) சுமார் 30,000 டாலர் (சுமார் ₹30 லட்சம்) வரை இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்களின் moneyharmony123 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “நாங்கள் திட்டமிட்டு இவ்வளவு பெரிய கடனை வாங்கவில்லை. அமெரிக்காவில் குடியேறிய பிறகு, மற்றவர்களைப் போல வாழ வேண்டும் என்பதற்காக கார் வாங்குவது, வீட்டைப் புதுப்பிப்பது, சுற்றுலா செல்வது என வாழ்க்கையை ‘ஆட்டோபைலட்’ (Autopilot) பயன்முறையில் வாழ்ந்தோம். அதுவே எங்களை இந்த கடன் பொறியில் தள்ளியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
தங்களின் தவறுகளை உணர்ந்த இந்த தம்பதியினர், அடுத்த 1,200 நாட்களுக்குள் இந்தக் கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைப்பதாக சவால் எடுத்துள்ளனர். இதற்காக கடுமையான பட்ஜெட் திட்டங்கள் மற்றும் செலவுக் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களின் இந்த மீட்பு பயணத்தை சமூக வலைதளங்கள் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வாகப் பகிர்ந்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
