திண்டுக்கல் மாவட்டம், பழநாயக்கன்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதிக்கு வந்த பெண் ஒருவர், தாம் மின்வாரியத்தின் சார்பில் வந்துள்ளதாகக் கூறி, மின் இணைப்பு எண் (Service Number) ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக வீடு ஒன்றுக்கு ரூ.50 வசூலித்துள்ளார்.
இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு விசாரித்தபோது, “இதுபோன்ற எந்தக் கட்டண வசூலும் மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்படவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் அந்தப் பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, “மின்வாரிய உயர் அதிகாரிகளின் அனுமதியுடன்தான் இந்த வசூலை மேற்கொள்கிறேன்” என்று அவர் கூறியதாக தெரிகிறது.
உடனடியாக, அந்தப் பெண் குறிப்பிட்ட மின்வாரிய அதிகாரியை தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் தெளிவான பதில் அளிக்காமல் மழுப்பலாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால், இந்த நூதன மோசடியில் மின்வாரிய ஊழியர்கள் அல்லது அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில், “மின்வாரியத்தில் இருந்து வந்துள்ளோம்” என்று கூறி வீடுதோறும் ரூ.50 வசூலித்ததாகவும், அதற்கு யார் அனுமதி வழங்கினார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதும் பதிவாகியுள்ளது.
அந்தப் பெண், தாங்கள் தனியார் நிறுவனத்தின் சார்பில் செயல்படுவதாகவும், வீட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன் ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். ஆனால், பணம் வசூலித்தது குறித்து கேட்டபோது தெளிவான பதில் அளிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்ட மின்வாரிய ஊழியர் ஒருவர், “ஸ்டிக்கர் ஒட்ட அனுமதி மட்டுமே வழங்கப்பட்டது; வீடுதோறும் ரூ.50 வசூலிக்கும்படி யாருக்கும் அறிவுறுத்தவில்லை” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, மின் இணைப்பு எண் ஸ்டிக்கர் ஒட்டுவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்தது யாருடைய உத்தரவின் பேரில் நடைபெற்றது? இதில் தனியார் நிறுவனம் மட்டும்தானா தொடர்புடையது? அல்லது மின்வாரிய அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
