தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அரசு சத்துணவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
ஆய்வின்போது, சத்துணவு மையத்தின் வருகைப் பதிவேட்டில் 25 குழந்தைகள் வந்ததாகவும், அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அங்கு குழந்தைகள் இல்லாததையும், சத்துணவு உண்ணும் இடம் வெறிச்சோடி கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, அங்கிருந்த சத்துணவு அமைப்பாளரிடம், “வருகைப் பதிவேட்டில் 25 குழந்தைகள் வந்ததாக பதிவு செய்திருக்கிறீர்கள். ஆனால், இங்கு குழந்தை இல்லையே. இதற்கு என்ன காரணம்?” என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உரிய விளக்கம் அளிக்க முடியாமல், சத்துணவு அமைப்பாளர் அமைதியாக இருந்ததுடன், பின்னர் அலட்சியமான பதில்களை அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டபோதும், அவர் நேரடியாக பதிலளிக்காமல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆய்வின் போது, சத்துணவு மையம் செயல்பட்டு வந்த கட்டிடத்தின் பரப்பளவு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. “25 குழந்தைகள் அமர்ந்து உணவருந்தும் அளவுக்கு இந்த மையத்தில் போதிய இடவசதி உள்ளதா?” என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
மேலும், வருகைப் பதிவேட்டில் போலியான வருகைப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து கேட்டபோதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான விளக்கத்தை வழங்கவில்லை. மாறாக, கேள்வி எழுப்பியவர்களிடமே எதிர்கேள்வி எழுப்பியதோடு, தேவையற்ற வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது, அதிகாரிகளுக்கும் செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். போலீசில் புகார் அளிக்க வேண்டியிருந்தாலும் அளிப்பேன்” என அதிகாரி தெரிவித்த நிலையில், செய்தியாளர் தொடர்ந்து வருகைப் பதிவேடு தொடர்பாக விளக்கம் கேட்டார்.
மேலும், “10 அல்லது 12 குழந்தைகள் மட்டுமே வரும்போது, 25 குழந்தைகள் வந்ததாக வருகைப் பதிவு செய்வது விதிமீறல் இல்லையா?” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கும், அதிகாரிகளால் தெளிவான பதில் அளிக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அரசின் சத்துணவு திட்டத்தில் போலியான வருகைப் பதிவு செய்யப்பட்டதா, உணவு வழங்கியதாக தவறான கணக்குகள் காட்டப்பட்டனவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, உண்மையில் முறைகேடு நடைபெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
