https://republictn.com/

மூன்று நாடுகளுக்கான இந்தோ–பசிபிக் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சென்றடைந்தார். அங்கு இந்திய வம்சாவளியினர் மற்றும் இந்தோனேசிய கலைக் குழுவினர் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, இந்தோனேசிய மாணவர்கள் இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சிவபெருமானை போற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நாட்டிய நிகழ்ச்சியின் பின்னணியில் இனிய தமிழ் பக்திப் பாடல் ஒலித்தது.

வெளிநாட்டு மண்ணில் தமிழ் இசையும், தமிழ் பக்திப் பாடலும் ஒலித்ததைக் கேட்டு பிரதமர் நரேந்திர மோடி கைதட்டி, மெய்மறந்து ரசித்தார். அந்தக் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிகழ்வு, இந்தியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் பண்பாட்டு மற்றும் கலாச்சார உறவை மீண்டும் உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் இந்தோனேசிய வான்வெளியில் நுழைந்தவுடன், அந்நாட்டு விமானப்படையின் அதிநவீன எப்-16 மற்றும் சுகோய்-30 போர் விமானங்கள் அணிவகுத்து பறந்து அவருக்கு சிறப்பான வான்வழி மரியாதை செலுத்தின.

ஜகார்த்தா விமான நிலையத்தில் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ நேரில் வந்து பிரதமர் மோடியை வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைந்தது.

மூன்று நாடுகளுக்கான இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக, ஜூலை 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு செல்ல உள்ளார்.

1986-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதன் பின்னர், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற உள்ளார்.

பிரதமர் மோடியின் இந்த வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து வருவதாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பிரான்ஸ் சென்றிருந்த பிரதமர் மோடி, உலகளாவிய முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றியபோது, இந்தியா 2 லட்சத்திற்கும் அதிகமான புதுமைத் தொழில் நிறுவனங்களுடன் உலகளாவிய கண்டுபிடிப்புகளின் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.

By Eswari

3 thoughts on ““வெளிநாட்டில் உருகிய தமிழ்ப் பாடல்.. 40 வருட சாதனையை உடைக்கும் மோடி..!! உலகையே அதிரவைக்கும் வரலாற்றுப் பயணம்!””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 week ago at 1 week ago