பிரான்சின் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவர் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பை விட 40 மடங்கு அதிக இரும்பைப் பயன்படுத்தி ஒரு பிரம்மாண்ட தொழில்துறை வளாகம் இந்தியாவில் கட்டப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அந்த சாதனையை நிகழ்த்தியிருப்பது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள HPCL Rajasthan Refinery Limited (HRRL) நிறுவனத்தின் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகம்தான்.
ராஜஸ்தான் மாநிலம் பாலோத்ரா மாவட்டத்தின் பச்சபத்ரா பகுதியில், சுமார் ₹79,459 கோடி (சுமார் ₹80 ஆயிரம் கோடி) மதிப்பீட்டில் இந்த பிரம்மாண்ட சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகம் (Refinery-cum-Petrochemical Complex) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 4-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்தத் திட்டம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) மற்றும் ராஜஸ்தான் அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ளது. இதில் HPCL நிறுவனத்திற்கு 74 சதவீதமும், ராஜஸ்தான் அரசுக்கு 26 சதவீதமும் பங்கு உள்ளது.
இந்த ஆலையின் கட்டுமானத்தில் சுமார் 3 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஈபிள் டவர் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பை விட 40 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபா கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கான்கிரீட்டை விட 5 மடங்கு அதிகமாக, சுமார் 16 லட்சம் கன மீட்டர் கான்கிரீட் இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்சார கேபிள்களின் மொத்த நீளம் சுமார் 28 ஆயிரம் கிலோமீட்டர் ஆகும். இது பூமியை இரண்டு முறை நேர்கோட்டில் சுற்றிவரும் தூரத்துக்கு நிகரானது என்பதால், இந்தத் திட்டத்தின் பிரம்மாண்டம் மேலும் வெளிப்படுகிறது.
சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, ஆண்டுக்கு 9 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். மேலும், இந்தியாவின் முதல் முழுமையான BS-VI தர எரிபொருள் மற்றும் அதிநவீன பெட்ரோகெமிக்கல் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் வளாகம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய், ராஜஸ்தானின் எண்ணெய் வயல்களிலிருந்தும், தேவைக்கேற்ப குஜராத்தின் முந்திரா துறைமுகத்திலிருந்து சுமார் 487 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய் வழித்தடம் மூலம் கொண்டு வரப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆண்டுதோறும் சுமார் ₹5,000 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு உருவாகுவதோடு, மாநிலத்தின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதியை குறைத்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, பெட்ரோகெமிக்கல் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் திறனையும் இந்தத் திட்டம் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பிரம்மாண்ட சுத்திகரிப்பு ஆலை கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக திட்டமிட்டபடி திறக்கப்படாமல், திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அனைத்து பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 4-ஆம் தேதி இந்த ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிக இரும்பு, புர்ஜ் கலீஃபாவை விட 5 மடங்கு அதிக கான்கிரீட், 28 ஆயிரம் கிலோமீட்டர் மின்கேபிள்கள், ரூ.80 ஆயிரம் கோடி முதலீடு என பல்வேறு சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் பொறியியல் திறனுக்கும் தொழில்துறை வளர்ச்சிக்கும் புதிய அடையாளமாக உருவெடுத்துள்ளது.

[…] சீனாவுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா! 40… […]
[…] சீனாவுக்கே டஃப் கொடுக்கும் இந்தியா! 40… […]